அமைச்சர் நிகழ்ச்சியை புறக்கணித்த திமுக எம்.எல்.ஏ.! அதிருப்திக்கு என்ன காரணம்? மீண்டும் பஞ்சாயத்து!
திருச்சி: அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்ற அரசு நிகழ்ச்சியை லால்குடி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் சவுந்தரபாண்டியன் புறக்கணித்திருப்பது கட்சி வட்டாரத்தில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் லால்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ரூ.1.21 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிலையில் லால்குடி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் சவுந்திரபாண்டியன் இந்த நிகழ்ச்சிக்கு வராமல் புறக்கணித்திருந்தார். ஏற்கனவே அமைச்சர் நேரு மீது கொண்ட அதிருப்தியால் தான் சவுந்திரபாண்டியன் எம்.எல்.ஏ. சில நாட்கள் அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை தவிர்த்து வந்தார்.

இதனிடையே திமுக தலைமை தலையிட்டதை தொடர்ந்து மீண்டும் அமைச்சர் நேருவுடன், சவுந்திரபாண்டியன் எம்.எல்.ஏ. இணக்கமாக இருப்பது போல் தெரிந்தது. ஆனால் மீண்டும் என்ன நடந்ததோ தெரியவில்லை, தனது தொகுதியில் அமைச்சர் நேரு தலைமையில் நடைபெற்ற அரசு விழாவை சவுந்திரப்பாண்டியன் எம்.எல்.ஏ. புறக்கணித்துள்ளார். இது திமுக வட்டாரத்தில் மட்டுமல்ல அரசியல் களத்திலும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால் ஒரு காலத்தில் அமைச்சர் நேருவின் மிக நெருங்கிய வட்டத்தில் இருந்தவர் சவுந்தரபாண்டியன் எம்.எல்.ஏ என்பது தான். ஆனால் அப்படிப்பட்ட அவரே இன்று நேருவை விட்டு விலகத் தொடங்கியிருக்கிறார் எனக் கூறப்படுவது தான் திமுக நிர்வாகிகள் மத்தியில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அதிகாரிகள் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் தன்னை மதிப்பதில்லை என்ற வருத்தமும், தனது கோரிக்கைகளை நிறைவேற்றுவதில்லை என்ற கோபமும் சவுந்திரபாண்டியனுக்கு இருந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே லால்குடியில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய அமைச்சர் நேரு, டி.எஸ்.பி. அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம், உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களும் ஒருங்கிணைந்த வளாகத்தில் கட்டப்படுவதற்கான பணிகள் தொடங்கவிருப்பதாகவும் இதற்காக அரசு ரூ.40 கோடி ஒதுக்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications