கொரோனா விபரீதம்... திமுக எச்சரித்தும் அரசு அலட்சியம் செய்தது... கே.என்.நேரு குற்றச்சாட்டு
திருச்சி: கொரோனா வைரஸ் விபரீதம் பற்றி திமுக முன்கூட்டியே சட்டமன்றத்தில் எச்சரிக்கை செய்ததாகவும், ஆனால் அதனை அரசு அலட்சியம் செய்துவிட்டதாகவும் திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு புகார் கூறியுள்ளார்.
திருச்சி மேற்கு தொகுதிகுட்பட்ட மக்களுக்கு இலவச மாஸ்க், சானிடைஸர், சோப்புகள் உள்ளிட்ட பொருட்களை இலவசமாக விநியோகித்த அவர் இதனை கூறியுள்ளார். கொரோனா வைரஸ் பரவிவரும் விதம் குறித்து திமுக எச்சரிக்கை விடுத்தபோதெல்லாம் அதனை முதல்வர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும், இப்போது அந்த நோயின் தீவிரத்தன்மையை உணர்ந்து முதல்வர் செயல்படத் தொடங்கியுள்ளார் எனவும் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

மேலும், குடும்ப அட்டை ஒன்றுக்கு ரூ.1000 வழங்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பு திருப்தியாக இல்லை என்றும், உதவித்தொகையை இன்னும் அதிகரித்து தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே தற்போது சமூக விலகலை கடைபிடித்து வரும் சூழலில், குடும்ப அட்டைதாரர்களுக்கு எப்படி ஆயிரம் ரூபாய் பணத்தை அரசு கொடுக்கப்போகிறது என்ற விவரத்தை வெளியிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், ஆயிரம் ரூபாய் பணம் இப்போதைய சூழலில் யாருக்கும் போதுமானதாக இருக்காது என திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு கூறினார்.
இதனிடையே சட்டமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைக்க வேண்டும் என்றும், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்க வேண்டும் எனவும் கடந்த வாரமே எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது. இம்மாதம் 31-ம் தேதி வரை சட்டமன்ற கூட்டத்தொடரை நடத்த திட்டமிட்டிருந்த தமிழக அரசுக்கு கடந்த திங்கள்கிழமை டெல்லியில் இருந்து வந்த அறிவுறுத்தலை அடுத்தே செவ்வாய்கிழமையுடன் பேரவை கூட்டம் முடியும் என அறிவிக்கப்பட்டது.
இதனிடையே திமுக பேச்சை கேட்டு கடந்தவாரமே தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்தி இருந்தால் கொரோனா வைரஸ் பாதிப்பின் தாக்கத்தை வெகுவாக குறைத்திருக்கலாம் என திமுக முன்னணியினர் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications