ஐ பேக் ஊழியர்களால் கோபத்தில் கண் சிவந்த திமுக உடன்பிறப்புகள்... திருச்சி மாநாடு குளறுபடிகள்..!
திருச்சி: சிங்கப்பூர் -லண்டன் என வெளிநாடுகளில் நடைபெறக்கூடிய பிரம்மாண்ட நட்சத்திர கலைவிழாக்களை மிஞ்சும் வகையில் திருச்சியில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது.
தமிழக அரசியல் வரலாற்றில் இப்படியொரு பிரம்மாண்ட செட் அப்பில் எந்தவொரு அரசியல் கட்சியும் பொதுக்கூட்டம்(மாநாடு) நடத்தியதில்லை.
இதனிடையே திமுக வி.ஐ.பி.க்கள் பலரையும் பின்பக்க (மேடை அருகே இருந்த) நுழைவுவாயில் வழியே ஐ பேக் ஊழியர்கள் அனுமதிக்க மறுத்ததால் பலரும் கோபித்துக்கொண்டு காரை சட்டென எடுத்துக்கொண்டு புறப்பட்டத்தை காண முடிந்தது.
திருச்சியில் நேற்று நடைபெற்றது பொதுக்கூட்டம் என்றழைக்கப்பட்டாலும் அது மாநாடாகவே அமைந்திருந்தது. அப்படியொரு பேரெழுச்சியை திமுக தொண்டர்கள் மத்தியிலும் நிர்வாகிகள் மத்தியிலும் காண முடிந்தது. இதனிடையே 10-க்கும் மேற்பட்ட நுழைவுவாயில்கள் அமைக்கப்பட்டிருந்த சூழலில், பத்திரிகையாளர்கள் மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்களுக்காக மேடையின் பின்புறம் வி.ஐ.பி. நுழைவு வாயில் அமைக்கப்பட்டிருந்தது.
அந்த நுழைவு வாயிலில் நகரச்செயலாளர்கள் உள்ளிட்ட இன்னும் பல தலைமைக் கழக நிர்வாகிகளும் வந்தனர். ஆனால் அவர்களில் பலரையும் ஐ பேக் ஊழியர்களுக்கும், அங்கு நின்று கொண்டிருந்த பவுன்சர்களுக்கும் அடையாளம் தெரியவில்லை. ஒரு சிலர் ஐ பேக் ஊழியர்களுடன் முட்டி மோதி வாக்குவாதம் செய்து உள்ளே நுழைந்தனர். ஒரு சிலர் இப்படியெல்லாம் சண்டை போட்டு உள்ளே போகத் தேவையில்லை எனக் கருதி நடந்த விவரத்தை தங்கள் மாவட்டச் செயலாளர்களுக்கு வாட்ஸ் அப் செய்துவிட்டு அடுத்த நொடியே அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விட்டனர்.
திருவண்ணாமலை நகரச் செயலாளர் ஸ்ரீதர், முன்னாள் மாவட்டச் செயலாளரும், மகளிர் அணி நிர்வாகியுமான அங்கையற்கன்னி உள்ளிட்ட பல நிர்வாகிகளிடம் ஐ பேக் ஊழியர்கள் நோ பெர்மிஷன் என்று கறார் காட்டினர். இப்படி முக்கிய நிர்வாகிகள் பலர் பல நூறு கிலோ மீட்டர் தூரம் பயணித்து வந்தும் மனம் வெதும்பி உடனடியாக தங்கள் கார்களுக்கே சென்றதை காண முடிந்தது.
இது ஒரு குழப்பம் என்றால் எல்லாவற்றுக்கும் மேலாக மேடை அமைப்பில் பெரிய குளறுபடியை நிகழ்த்தியிருந்தது ஐ பேக். வாண வேடிக்கை, வண்ண விளக்குகள், எல்.இ.டி. திரை, தொண்டர்களை ஸ்டாலின் பார்க்கும் வகையில் நடைமேடை எல்லாம் ஓ.கே. ஆனால் மேடைக்கு நடுவே மலைபோல் படிக்கட்டுகளை அமைத்து தொண்டர்களின் சாபத்தை பெற்றுக்கொண்டது ஐ பேக் நிறுவனம். தங்கள் தலைவர் ஸ்டாலினை காண முடியவில்லையே, இப்படி படிக்கட்டுகளை அமைத்து மேடையின் அமைப்பையே சீர் குலைத்துவிட்டார்களே என்ற புலம்பல் மாநாடு மைதானத்தில் அதிகம் கேட்க முடிந்தது.
அதேபோல் மேடையில் இருந்து 200 மீட்டர் காலியாகவே வைக்கப்பட்டிருந்தது. பத்திரிகையாளர்கள் கூட 200 மீட்டர் தொலைவில் தான் அமரவைக்கப்பட்டிருந்தனர். இது முழுக்க முழுக்க வட இந்திய பாணி பிரச்சார ஸ்டைல். தமிழகத்தை பொறுத்தவரை அதுவும் குறிப்பாக திமுக திமுக பொதுக்கூட்டங்களை பொறுத்தவரை மேடைக்கும் முன் வரிசைக்கும் சுமார் 15 அடி இடைவெளிதான் இருக்கும். நேற்று நடைபெற்ற நிகழ்வில் நிலைமை அப்படியே தலைகீழாக அமைந்திருந்தது.
திமுக பொதுக்கூட்டம், மாநாடு என்றாலே பந்தல் சிவா, வேலூர் கார்த்தி, அருப்புக்கோட்டை ஹமீது ஆடியோஸ் தான் ஒலி ஒளி அமைப்பு மற்றும் மாநாடு அரங்கம் அமைப்பார்கள். ஆனால் நேற்று நடைபெற்ற திமுக பொதுக்கூட்டதில் அவர்களுக்கு வேலையே இல்லாமல் மொத்தப் பணியையும் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டது ஐ பேக். இதனிடையே மேடையின் வலதுபுறம் மேடைக்கும்-முன் வரிசைக்கும் இடையே காலியாக இருந்து 200 அடி பரப்பை உடன் பிறப்புகள் கடல் அலை போல் எழும்பி ஓரிரு நொடிகளில் நிரப்பிவிட்டனர். அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த 10 முதல் 15 பவுன்சர்கள் ஓடி வந்தும் அது எடுபடவில்லை.
இதனை பார்த்த எ.வ.வேலு, விட்டுவிடுங்கள் அவர்கள் உட்காரட்டும் என ஐ பேக் ஊழியர்களிடம் கூறிவிட்டார். அந்த தருணத்தில் அங்கு உதயநிதி ஸ்டாலின் மேடையேறியவுடன் ஆர்ப்பரித்த உ.பி.க்கள் அவர் பேசியே ஆகவேண்டும் அவரிடம் மைக்கை கொடுங்கள் என எ.வ.வேலுவை நோக்கி குரல் எழுப்ப, அவரும் உதயநிதியிடம் மைக்கை கொடுத்து அமைதிப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.