அதிமுக மாதிரியே.. திமுகவும் 'ஜனநாயக முறைப்படி' கூட்டுறவு சங்கத் தோ்தலை நடத்தும்.. கே.என்.நேரு
திருச்சி: அதிமுக எப்படி கூட்டுறவு சங்கத் தோ்தலை நடத்தியதோ, அதேபோன்ற 'ஜனநாயக முறைப்படி' திமுகவும் கூட்டுறவு சங்கத் தோ்தலை நடத்தும் என அமைச்சர் கேஎன் நேரு கூறினார்.
திருச்சி மத்திய மாவட்டம் மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நேற்று திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவர்கள் தர்மலிங்கம் மற்றும் அம்பிகாபதி ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட செயலாளர்கள் வைரமணி, காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ., தொகுதி பொறுப்பாளர்கள் ராமலிங்கம் எம்.பி., கோவி செழியன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க. முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

கூட்டத்தில், நடைபெற உள்ள கூட்டுறவு சங்க தேர்தலில் தி.மு.க.வினர் முழுமையாக பங்கேற்கும் வகையில் அனைத்து சங்கங்களிலும் உறுப்பினராக சேர விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து விரைவில் அந்தந்த சங்கங்களில் ஒப்படைக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நடைபெற உள்ள புதிய வாக்காளர்கள் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்ய அடுத்த மாதம் நடைபெறும் சிறப்பு முகாமின் போது அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் தி.மு.க.வினர் அனைவரும் பங்கேற்று புதிய வாக்காளர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். காலை உணவு திட்டம், மகளிர் உரிமைத்தொகை வழங்கிய முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், "அதிமுக எப்படி 'ஜனநாயக முறைப்படி' கூட்டுறவுத் தோ்தலை நடத்தியதோ, அதேபோலவே திமுகவும் ஜனநாயக முறைப்படி இந்தத் தோ்தலை நடத்தும். கடந்த அதிமுக ஆட்சியில் கூட்டுறவுச் சங்கங்களில் பல்வேறு தவறுகள் நடந்தது. எனவே தான், தோ்தல் முடியும் வரை நாங்கள்தான் பொறுப்பில் இருப்போம் என்று உயா்நீதிமன்றத்தை நாடி உள்ளனா் அதிமுக-வினா். கூட்டுறவு தோ்தல் என்பது மிக மிக முக்கியமான தோ்தல் என்பதை கட்சித் தொண்டா்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
பாஜக-வின் திட்டமே தமிழகத்தில் அதிமுக-வையும், திமுக-வையும் இரண்டாக்க வேண்டும் என்பதுதான். எனவேதான், திமுக-வினா் மற்றும் அமைச்சா்களிடம் தொடா்ந்து சோதனை என்ற பெயரில் மிரட்டல் விடுத்து வருகிறது பாஜக. இன்று ஜெகத்ரட்சகன் வீட்டில் நடைபெறும் சோதனையும் மிரட்டல் நடவடிக்கைதான். கூட்டுறவு சங்கங்களுக்கான தோ்தலில் அமோக வெற்றி பெற வேண்டும். பின்னா், மக்களவைத் தோ்தல், அடுத்ததாக சட்டப் பேரவைத் தோ்தல் என தொடா்ந்து வெற்றியை பெறுவோம் இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாநகர செயலாளரும், மேயருமான அன்பழகன், எம்.எல்.ஏ.க்கள் சவுந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், கதிரவன், பழனியாண்டி, கவுன்சிலர் காஜாமலை விஜி முத்துச்செல்வம் மாநில மாணவர் அணி அமைப்பாளர் பி எம் ,ஆனந்த்,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த்,
உள்பட திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கிளைக்கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications