நேருக்கு நேராக மோதிப்பாருங்க...குடும்பத்தை தொந்தரவு செய்யாதீங்க: கண்ணீர் விட்டு அழுத விஜய பிரபாகரன்
அரசியலில் போட்டி என்றால் நேருக்கு நேராக மோத வேண்டும். குடும்பத்தை தனிப்பட்ட முறையில் தொந்தரவு செய்யக்கூடாது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் கண்ணீர் மல்க உருக்கமாக பேசியுள்ளார் .
திருச்சி : அரசியலில் நேருக்கு நேரா மோதிப்பாருங்க. ஆனா குடும்பத்த தொந்தரவு பண்ணாதீங்க என்று திருமண விழாவில் விஜயபிரபாகரன் கண் கலங்க பேசியது தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் இருக்கிறோம் என்று கூறி கட்சி நிர்வாகிகள் ஆறுதல் கூறினர்.
தே.மு.தி.க பொதுச்செயலாளரும் நடிகருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் அவதிப்பட்டுவருகிறார். அதனால், அவரால் கட்சிப் பணியில் முழுவதுமாக ஈடுபடமுடியவில்லை. அதனால், விஜயகாந்தின் மனைவி பிரமேலதா விஜயகாந்த், அவரது மகன் விஜயபிரபாகரன் ஆகியோர் கட்சிப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் விஜய பிரபாகரனும் மாநிலம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கட்சியில் பிரேமலதா உள்பட அனைவரும் தோல்வியடைந்தனர். பலரும் தேமுதிகவில் இருந்து வேறு கட்சிக்கு தாவி வருகின்றனர். இதனைக் கண்டித்து விஜயகாந்த் சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

மணப்பாறையில் விழா
இந்த நிலையில் மணப்பாறையில், விராலிமலை மேற்கு ஒன்றிய தொண்டரணி செயலாளர் கோபாலகிருஷ்ணன் இல்ல திருமண விழாவிற்கு புதன்கிழமை வந்திருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரனுக்கு, தேமுதிக சார்பில் திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் பாரதிதாசன் மற்றும் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சுப்பிரமணி ஆகியோர் தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. பட்டாசுகள் வெடித்து வரவேற்பு அளித்தனர்.

கட்சி தாவியவர்கள்
நொச்சிமேடு பகுதிலிருந்து திருமண மண்டபம் வரை தொண்டர்களின் இருச்சக்கர வாகன பேரணியாக விஜயபிரபாகரன் அழைத்து செல்லப்பட்டார். அதனைத்தொடர்ந்து தொண்டர்களோடு புகைப்படங்கள் எடுத்துக்கொண்ட விஜயபிரபாகரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம் தேமுதிகவை விட்டு வேறு கட்சிக்கு செல்பவர்களைப் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பிரபாகரன், கொரோனா காலத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். அதனால் கட்சிக்கு பின்னடைவு இல்லை. அது போல கட்சித்தாவி சென்றவர்களால் பின்னடைவு ஏற்படாது என்றார்.

பிழைப்புக்காக போயுள்ளனர்
கொரோனாவில் இறந்தவர்களைப் போல கட்சி தாவியுள்ளவர்களையும் நினைத்துக்கொள்வோம். சம்பாதிக்க வேண்டுமென கட்சிக்கு வந்தவர்கள் தற்போது பிழைப்பதற்காக சென்றுள்ளனர், அவர்களுடன் யாரும் பின்னாடி செல்லவில்லை. தேமுதிகவிற்கு பின்னடைவு கிடையாது என்று விஜயபிரபாகரன் கூறினார்.

அரசியல் பயணம்
பள்ளிகள் திறக்காமல் இருக்கும் நிலையில், குழந்தைகள் கல்வி கற்கும் முறையினை மறந்து, தேவையான கல்வியை நாம் கொடுக்காததால் செல்போனில் ஆபத்தான விளையாட்டுகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். முறையான பாதுக்காப்பு நெறிமுறைகளை கடைபிடித்து பள்ளிகள் திறக்க வேண்டும் என்றார். பண்டிகை காலம் முடிந்தபின்பு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து அடுத்தக்கட்ட கூட்டணி மற்றும் தேர்தல் பணிகள், அரசியல் பயணம் குறித்து கட்சி தலைமை முடிவெடுக்கும் என கூறினார்.
Recommended Video

விஜயகாந்த் திட்டம்
அதேபோல் வீடுதேடி கல்வித்திட்டம் குறித்து பேசிய விஜயபிரபாகரன், தற்போது பள்ளிகள் திறந்துவிட்டதால் அந்த திட்டம் தேவையில்லை என்றும் தெரிவித்தார். ரேசன் பொருட்கள் வீடு தேடி வரும் என்று கடந்த 2005ஆம் ஆண்டு விஜயகாந்த் சொன்னார். அப்போது எல்லாரும் சிரித்தார்கள். இப்போது எல்லாமே வீடு தேடி வருகிறது. அனைத்தையும் காலம்தான் நிர்ணயம் செய்கிறது. தேமுதிகவிற்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளதாக கூறினார்.

கண் கலங்கிய விஜயபிரபாகரன்
திருமண விழாவில் மணமக்களை வாழ்த்திப்பேசிய விஜயபிரபாகரன், திடீரென கண் கலங்கினார். அரசியலில் நேருக்கு நேரா மோதிப்பாருங்க. ஆனா குடும்பத்த தொந்தரவு பண்ணக்கூடாது என்றார். என்னுடைய அப்பா கேப்டன் நலமாக இருக்கிறார். அவரை நாங்கள் நற்காக பார்த்தக் கொண்டிருக்கிறோம் என்றார். அவரைப்பற்றியும் எங்கள் குடும்பத்தைப் பற்றியும் யாரும் தவறாக பேசக்கூடாது என்று கூறி மேடையிலேயே கண்கலங்கி அழத் தொடங்கினார். இதனால் பேச முடியாமல் நா தழுதழுத்தது. அப்போது கட்சி நிர்வாகிகள் நாங்கள் இருக்கின்றோம் என்று கூறி அவரை ஆசுவாசப்படுத்தினர். அதன் பின்னர் மீண்டும் பேச்சை தொடங்கினார். கட்சி நிர்வாகியின் இல்ல விழாவில் விஜயபிரபாகரன் கண்கலங்கிய சம்பவம் விழாவில் பங்கேற்ற பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.












Click it and Unblock the Notifications