பரபர சூழலுக்கு மத்தியில் புதுக்கோட்டை செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்! திருச்சியில் ட்ரோன்கள் பறக்க தடை
திருச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி திருச்சியில் இன்று ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி ட்ரோன்களை பறக்கவிட்டால் நடவடிக்கை என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கள்ளச்சாராய மரணங்கள், அரசியல் தலைவர்கள் அடுத்தடுத்து கொலை உள்ளிட்ட சம்பவங்களால் திமுக அரசுக்கு பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது. சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட சம்பவத்தால் இன்னும் பதற்றம் நீடித்து வருகிறது. சட்டம் ஒழுங்கு தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்த பரபரப்பான சூழலில் புதுக்கோட்டை மாவட்டம் பொன் புதுப்பட்டியில் நடைபெறும் சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்ள முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலை விமானம் மூலம் திருச்சி செல்ல உள்ளார். அங்கிருந்து கார் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு செல்ல இருக்கிறார்.
முதலமைச்சர் ஸ்டாலின் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு செல்வதற்காக இன்று 5.50 மணியளவில் திருச்சிராப்பள்ளி விமான நிலையம் வருகை தர இருப்பதால் பாதுகாப்பு காரணம் கருதி ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது என திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை 6 மணி முதல் இன்று முழுவதும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் செல்வதற்காக இன்று மாலை திருச்சி விமான நிலையம் வரும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திமுகவினர் சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. இதனை தொடர்ந்து கார் மூலம் புதுக்கோட்டை மாவட்டம் பொன். புதுப்பட்டிக்கு சுமார் 7 மணியளவில் முதலமைச்சர் ஸ்டாலின் செல்கிறார்.
அங்கு அமைச்சர் ரகுபதி திருமண நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் கார் மூலம் 8 மணிக்கு திருச்சி திரும்பி அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு வரவுள்ளார். இதனால் திருச்சி மற்றும் புதுக்கோட்டை பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சட்டத்துறை அமைச்சரும், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான எஸ்.ரகுபதியின் பேரன் டாக்டர் எஸ்.நாச்சியப்பன் ரகுபதி - டாக்டர் பி.அழகம்மை திருமணம் புதுக்கோட்டையை அடுத்த புதுப்பட்டியில் இன்று காலை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து திருமண வரவேற்பு விழா இன்று மாலை 6 மணி அளவில் புதுக்கோட்டை ஜெ.ஜெ கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.












Click it and Unblock the Notifications