காவிரி பிரச்சனையை தீர்க்க 'நைல் நதி' பங்கீடு ஃபார்முலா தான் ஒரே வழி! துரை வைகோ கொடுக்கும் ஐடியா!
திருச்சி: உலக அளவில் நதி நீர் பங்கீட்டுக்கு 'நைல் நதி' ஒப்பந்தம் சிறந்த வழிகாட்டியாக திகழ்கிறது என்றும் காவிரி பிரச்சனையை தீர்க்க அதே ஃபார்முலாவை கையாளலாம் எனவும் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ ஆலோசனை வழங்கியுள்ளார்.
தனது தந்தை வைகோவை போலவே முன் தயாரிப்புகளுடனும், வரலாற்றுத் தரவுகளுடனுடம் பொதுக்கூட்டங்களில் பேச ஆரம்பித்திருக்கிறார் துரை வைகோ. இதனிடையே திருச்சியில் நடைபெற்ற மதிமுக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசியதாவது;

தண்ணீருக்காக கண்ணீர்: ''தமிழ்நாட்டின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில், ஒரு பக்கம் அண்டை மாநிலமான கேரளம் முல்லை பெரியாறு அணையை உடைத்து விட்டு புதிய அணைகளை கட்டுவோம் என்கிறது. கர்நாடகா மாநிலத்தில் மேகதாதுவில் புதிய அணை கட்டுவோம் என, அங்கே கொக்கரிக்கிறார்கள். ஆந்திராவில் பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவோம் என்கிறார்கள். இப்படி தமிழகத்தை 3 பக்கமும் ஆபத்து சூழ்ந்து நிற்கிறது. தண்ணீருக்காக தமிழகம் தொடர்ந்து கண்ணீர் வடிக்கும் அவல நிலையில் இருக்கிறது. என்ன தீர்வு இதற்கு?''
'நைல் நதி' ஒப்பந்தம்: ''உலக அளவில் நதி நீர் பங்கீட்டுக்கு 'நைல் நதி' ஒப்பந்தம் வழிகாட்டியாக உள்ளது. ஆறுகள் பிறக்கும் மாநிலத்தைவிட, அது பயணிக்கும் மாநிலத்துக்குத்தான் அதிக உரிமை என்கிறது அந்த ஒப்பந்தம். இதன்படி பார்த்தால், காவிரியில் தமிழகத்துக்குத்தான் அதிக உரிமை இருக்கிறது. காரணம், காவிரி தமிழநாட்டில்தான் அதிக தூரம் பாய்கின்றது.''
3 நாடுகள் அமர்ந்து பேசி: நைல் நதியை பங்கிட்டுக் கொள்வதில் எகிப்து, எத்தியோப்பியா, சூடான் என மூன்று நாடுகள் அமர்ந்து பேசி சுமூகமான ஒரு தீர்வை எட்டிவிட முடிகின்றது. ஆனால், ஒரே நாட்டிற்குள் இருக்கின்ற இரு மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண முடியவில்லை. தமிழ்நாட்டில் இருக்கும் கூடங்குளம் அனுமின் நிலையத்திலிருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தில் 55% விழுக்காடு மின்சாரம் தான் தமிழ்நாடு பயன்படுத்துகிறது மீதம் உள்ள 45% விழுக்காடு மின்சாரம் அண்டை மாநிலங்கலான ஆந்திர பிரதேசமும் கர்நாடகமும் கேரளமும் பயன்படுத்துகின்றன.
நிலைமை விபரீதமாகும்: அந்தந்த மாநில நதிகள் அந்தந்த மாநிலங்களுக்கே சொந்தமானவை என நீங்கள் கருதினால். நீங்கள் தண்ணீர் தர மறுத்தால், ஒன்றிய அரசு அதை கைகட்டி வேடிக்கை பார்க்குமானால் நிலைமை விபரீதமாகும். உங்களுக்கு மின்சாரம் வழங்கும் நெய்வேலி அனல் மின் நிலையம் எங்களுக்கே சொந்தமானது. ஆவடி டேங்க் தொழிற்சாலை எங்களுக்கே சொந்தமானாது. இங்கே திருச்சியில் இருக்கிற துப்பாக்கி தொழிற்சாலையும் எங்களுக்கே சொந்தமானது என நாங்களும் உரிமை கொண்டாட வேண்டிய நிலை ஏற்படும்.












Click it and Unblock the Notifications