திமுக அமைச்சர்களுடன் அண்டர்டேபிள் டீலிங்..அதிமுக ’மாஜியை’ வெளுத்தெடுத்த எடப்பாடி! அடுத்து ஆக்சனாம்!
திருச்சி: அதிமுக பாஜக கூட்டணி தொடர்பான பேச்சுகள் ஒருபுறம் தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. மற்றொரு புறம் சொந்த கட்சியிலேயே உள்ளடி வேலை பார்த்த சீனியர்கள், திமுகவுடன் நெருக்கமாக இருக்கும் மாஜி அமைச்சர்களின் பட்டியலை வைத்து எடப்பாடி பழனிச்சாமி ஆக்சனுக்கு தயாராகி வருகிறாராம். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் திருச்சியை சேர்ந்த நிர்வாகிகளை கடுமையாக எச்சரித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி என்கின்றனர் திருச்சி மாவட்ட அதிமுகவினர்.
தமிழக அரசியல் களம் தற்போதே சூடாக மாறி இருக்கிறது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் முழுமையாக ஒரு ஆண்டு இருந்தாலும் தற்போது தேர்தலுக்கான பணிகளை திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
திமுக கூட்டணி ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில், அதிமுக வலுவான மெகா கூட்டணியை அமைக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது. பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக கூறி வந்தாலும் தற்போதைய சூழல் அதிமுக பாஜக கூட்டணி மீண்டும் அமையும் என்பதையே காட்டுகிறது.

அது மட்டுமில்லாமல் பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளையும் ஒருங்கிணைத்து திமுகவுக்கு நெருக்கடி கொடுக்க அதிமுக தயாராகி வருகிறது. அதன் வெளிப்பாடுதான் டெல்லியில் எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவை சந்தித்தது என்கின்றனர். இது ஒருபுறம் இருக்க சொந்த கட்சியில் இருக்கும் பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அடங்கிய கள ஆய்வுக் குழுவை எடப்பாடி பழனிச்சாமி அமைத்திருந்தார்.
அவர்கள் மாவட்டம் தோறும் சென்று ஆய்வு நடத்தி அறிக்கையை எடப்பாடி பழனிச்சாமி இடம் சமர்ப்பித்திருக்கின்றனர். கூட்டம் நடந்த போதே அடிதடி நடந்தது வேறு கதை. அதற்கு பிறகு குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட நிர்வாகிகளுடன் காணொளி காட்சியில் ஆய்வு குறித்து தகவல்களை வைத்து ஆலோசனை வழங்கினார். அப்போது ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட சில முன்னாள் அமைச்சர்களை கடுமையாக எச்சரித்ததாக கூறப்படுகிறது.
அந்த வகையில் திருச்சி நிர்வாகிகளை கடுமையாக எச்சரித்தாராம். திருச்சி மாவட்டத்தில் தற்போது அமைச்சர் கேஎன் நேருவும், அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் பலம் பொருந்திய அமைச்சர்களாக வலம் வருகின்றனர். அவர்களுடன் அதிமுக நிர்வாகிகள் சிலர் மறைமுக தொடர்பு வைத்துக்கொண்டு தங்களுக்கு வேண்டிய காரியங்களை செய்து கொள்கிறார்களாம். திருச்சி மாவட்ட துணை செயலாளர் பத்மநாபன், கேஎன் நேருவை எதிர்த்து போட்டியிட்டவர். அப்போதே அவர் ஒழுங்காக வேலை செய்யவில்லை என கூறப்பட்டது. தேர்தலில் தோற்றதுடன் ரியல் எஸ்டேட், சாலை கான்ட்ராக்ட் உள்ளிட்ட வேலைகளை நேருவின் ஆசியோடு செய்து வருவதாக எடப்பாடி பழனிச்சாமி இடம் புகார் தெரிவித்து இருக்கின்றனர் உள்ளூர் நிர்வாகிகள்.
இதேபோல உறையூர் பூபதி, மணப்பாறை பத்தி பாஸ்கர் உள்ளிட்ட ஒரு குறித்தும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ரிப்போர்ட் பறக்க அவர்களை கடுமையாக விமர்சித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் திருச்சி வடக்கு மாவட்ட செயலாளராக இருக்கும் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி, அமைச்சர் நேரு, அன்பில் மகேஷுக்கு எதிராக எந்த வேலையும் செய்யவில்லை. அவர்களை எதிர்க்கும் அதிமுக நிர்வாகிகளுக்கும் ஆதரவு தருவதில்லை என புகார்கள் பறக்க அவரையும் கண்டித்ததாக கூறப்படுகிறது. மேலும் புகாருக்கு உள்ளான நிர்வாகிகள் குறித்து ரகசியமாக அறிக்கையை தரும்படி உள்ளூர் நிர்வாகிகளிடமும், தனது நெருக்கமான புலனாய்வு குழுவினரிடமும் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளாராம். இதனால் எங்கே தங்கள் மீது நடவடிக்கை பாயுமோ என அச்சத்தில் இருக்கிறார்கள் திருச்சி நிர்வாகிகள்.












Click it and Unblock the Notifications