திருச்சி மாவட்டத்தில் முதல்முறையாக கொரோனாவுக்கு 70 வயது மூதாட்டி பலி
திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 70 வயது மூதாட்டி ஒருவர் இன்று காலை பலியானார்.
திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியைச் சேர்ந்த அந்த மூதாட்டி, கடந்த 29-ஆம் தேதி கொரோனா பாதிப்பு காரணமாக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த இவருக்கு, சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, இருதயகோளாறு ஆகியவையும் இருந்துள்ளது. மேலும், நுரையீரல் தொந்தரவும் அதிகரித்ததால் இன்று காலை பலியானார்.
இதுதொடர்பாக, மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் திருச்சி மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மூதாட்டியின் உடலை பாதுகாப்பாக அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் வழிகாட்டுதலின்படி, மூதாட்டியின் உடலை பாலக்கரை பகுதியில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 88 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்ததில் இதுவரை, 71 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்திலேயே முதன்முறையாக மூதாட்டி ஒருவர் பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்டத்தில் பில் கலெக்டராக உள்ள ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளது. மக்களிடம் நேரடித் தொடர்பில் உள்ள மாநகராட்சி ஊழியருக்கு கொரோனா தாக்கிய சம்பவம் மாநகராட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications