யாரு உண்மையான TVK.. தேர்தல் ஆணையத்திடம் இருந்து வராதது ஏன்?.. தவாக வேல்முருகன் சந்தேகம்!
திருச்சி: யார் உண்மையான TVK என்று முடிவு செய்து அறிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதத்திற்கு இதுவரை எந்த பதில் அளிக்கப்படவில்லை என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் மாற்று அரசியல் செய்ய வந்துள்ளாரா அல்லது மற்றவர்களால் வரவழைக்கப்பட்டுள்ளாரா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும் என்றும் கூறியுள்ளார்.
நடிகர் விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக தொடங்கினாலும், அரசியல் பணிகளை நிதானமாகவே விஜய் மேற்கொண்டார். கடந்த அக்டோபரில் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்திய விஜய், அதன்பின் பரந்தூரில் விமான நிலையத் திட்டத்திற்கு எதிராக போராடியவர்களை சந்தித்தார்.

தற்போது நிர்வாகிகள் நியமனத்தில் கவனம் செலுத்தி வரும் விஜய், அடுத்ததாக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதனிடையே தமிழக வெற்றிக் கழகத்திற்கான தேர்தல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோரை அணுகியுள்ளனர். அவரும் தவெக-வுக்கு தமிழ்நாட்டில் 15 முதல் 20 சதவிகித வாக்கு வங்கி இருப்பதாக கூறி அதிர்வலைகளை ஏற்படுத்தினார்.
இதனால் தமிழக அரசியலில் நடிகர் விஜய்-ன் செயல்பாடுகள் கூடுதல் கவனம் பெற்றுள்ளது. இதனிடையே தமிழக வெற்றிக் கழகத்தில் ஆங்கிலத்தில் சுருக்கமாக TVK என்று அக்கட்சியினர் அழைத்து வருகின்றனர். இதற்கு தொடக்கத்திலேயே தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடமும் முறையிட்டிருந்தார்.
இந்த விவகாரம் குறித்து திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து தவாக தலைவர் வேல்முருகன் பேசுகையில், தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஆங்கில சுருக்கமாக TVK என்பதை இந்திய தேர்தல் ஆணையத்தில் முதலில் பதிவு செய்தது நான்தான். நடிகர் விஜய் கட்சி தொடங்கி TVK என்று குறுப்பிடத் தொடங்கினார்.
இதன்பின் இந்திய தேர்தல் ஆணையத்திடம் யார் உண்மையாக TVK என்ற ஆங்கில சுருக்கத்தை பயன்படுத்தலாம் என்பதை முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும் என்று கடிதம் எழுதினேன். அதற்கு இதுவரை தேர்தல் ஆணையத்திடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. தேர்தல் ஆணையம் இறுதியிட்டு கூறாமல் இருப்பதன் பின்னணி கொஞ்சம் கொஞ்சமாக வெளி வந்து கொண்டிருக்கிறது.
இன்னும் சில தகவல்களும் வந்து கொண்டிருக்கிறது. இதனால் முழுமையாக விஜய் இந்த மண்ணுக்கும், மக்களுக்கும் மாற்று அரசியலை கொடுக்க வந்துள்ளாரா அல்லது மற்றவர்களால் வரவைக்கப்பட்டிருக்கிறாரா என்பது குறித்து இன்னும் சில நாட்களில் தெரியும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications