நான் மோடியின் ஃபேன்.. அவரை கடவுளாகவே பார்க்கிறேன்.. புளகாங்கிதத்துடன் பேசும்.. சிலை வைத்த சங்கர்!
பிரதமர் மோடிக்கு கோயில் கட்டிய சங்கர் விளக்கம் அளித்துள்ளார்
திருச்சி: "கோடிக்கணக்கான பேர் பிரதமர் மோடியின் திட்டத்தால் பலனடைந்து வருகிறார்கள்.. அதனால்தான் நான் அவரை கடவுளாக பார்க்கிறேன்.. அவருக்காக ஒரு கோயிலும் கட்ட ஆசைப்பட்டேன்" என்று பிரதமர் மோடிக்கு கோயில் கட்டியுள்ள திருச்சி விவசாயி சங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ளது எரகுடி என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் சங்கர்.. 50 வயதாகிறது. இவர் ஒரு விவசாயி.. கல்யாணமாகி பானுமதி என்ற மனைவி உள்ளார்.. இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர்.
சங்கரை பொறுத்தவரை, இவர் ஒரு பாஜக தொண்டர்.. எரகுடி விவசாய சங்க தலைவரும்கூட.. எரகுடியில் தனக்கு சொந்தமாக உள்ள விவசாய தோட்டத்தில் பிரதமர் மோடிக்காக ஒரு கோயிலை கட்டி உள்ளார். பார்ப்பதற்கு சின்ன கோயிலாகதான் இருக்கிறது.. ஆனால் சொந்த செலவில் இதை கட்டி, அதற்குள் மோடியின் ஒரு சிலையையும் வைத்துள்ளார்..தினமும் மோடி சிலைக்கு பாலாபிஷேகம், தீபாராதனை காண்பித்து வழிபாடு நடத்தி வருகிறார்.
சங்கர்
இதை பற்றி சங்கர் விளக்கம் அளித்துள்ளார்: "மூத்த மகள் தீபாவுக்கு கல்யாணமாகி வெளியூரில் உள்ளார்.. பெரிய மகன் சதீஷ்குமார் சென்னை அண்ணா யூனிவர்சிட்டியில் பிடெக் படிக்கிறான்.. சின்ன பையன் சூர்யா பிளஸ்-2 படிச்சிட்டு நீட் தேர்வுக்கு தயார் பண்ணிட்டு இருக்கான். ரொம்ப சிரமத்துக்கு நடுவிலதான் என்னுடைய குழந்தைகளை படிக்க வெச்சேன். எனக்கு சொந்தமாக 10 ஏக்கர் நிலம் இருக்கு.. நெல் போட்டிருக்கேன்..
வருமானம்
பிரதமர் மோடி ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இருந்தபோதிருந்தே அவரை எனக்கு பிடிக்கும்.. அவரை பற்றி நிறைய விஷயங்கள் கேள்விப்பட்டதும் எனக்கு ரொம்பவும் பிடிச்சு போச்சு.. அவருக்காக என் நிலத்தில் கோயில் கட்ட ஆசைப்பட்டேன். விவசாயத்தில் போதிய வருமானம் கிடைக்காததால் அப்போது என்னால் கோயில் கட்ட முடியவில்லை.
தனபால்
இப்போ விவசாயத்தில் ஓரளவு பணம் கிடைச்சது.. அதனால 8 மாசத்துக்கு முன்னாடிதான் கோயில் கட்ட ஆரம்பிச்சேன்.. 8 அடி நீளம், 8 அடி அகலத்தில் கோயில் கட்ட 8 மாசத்துக்கு முன்னாடி பூமி பூஜை போட்டேன்.. என் குடும்பத்தார் ரொம்பவே ஒத்துழைப்பு தந்தாங்க.. துறையூரை சேர்ந்த ஸ்தபதியான தனபால் என்பவரிடம் பிரதமருக்கு ஒரு சிலை செய்து தரணும்னு கேட்டேன்.. அவரும் ஒப்புக்கிட்டு, ஒரு மாசத்துல மோடியின் மார்பளவு சிலையை செய்து தந்தார்.
பொங்கல்
கொஞ்ச நாள்ல கோயில் கட்டுமான பணி முடிஞ்சது.. நாலா புறமும் கட்டிடம் எழுப்பி மேற்கூரை போட்டேன்.. பிரதமரின் சிலையை வைத்தேன்.. அன்னையில இருந்து, மோடியின் சிலைக்கு பாலாபிஷேகம் செய்கிறேன்.. 2 பக்கமும் குத்து விளக்கேற்றி வைக்கிறேன்.. பொங்கல் பிரசாதம் செய்து படையல் வைக்கிறேன். குடும்பத்தோட வழிபடுறோம்.
வைரல் போட்டோ
போன 22-ந்தேதி என் பேரன் கிருத்திக் சர்வீன் பிறந்தநாள்கூட மோடியின் கோயிலில் வைத்துதான் கொண்டாடினோம்.. கேக் வெட்டி எல்லாருக்கும் தந்தோம்.. இது சம்பந்தமான போட்டோ சோஷியல் மீடியாவில் பரவியதும் எல்லாருக்கும் இந்த விஷயம் தெரிஞ்சு போச்சு.. தினமும் இந்த கோயிலை அதிசயத்துடன் பார்த்து போகிறார்கள். கட்சியின் மூத்த தலைவர்களை வரவழைத்து கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்பதுதான் இப்போது என் ஒரே லட்சியம்.
கூட்டணி கட்சி
ஆனால் நான் ஒரு எம்ஜிஆர் ரசிகன்.. அதனாலதான் இந்த கோயில் எம்ஜிஆர், ஜெயலலிதா படத்தை வைத்துள்ளேன். கூட்டணி கட்சி என்ற அடிப்படையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் போட்டோவும், தேச தலைவர்களான காந்தி, காமராஜர் படங்களையும் வைத்திருக்கிறேன். ஜெயலலிதா இறந்தபிறகு, முக ஸ்டாலின் எப்படியாவது கட்சியை அழிக்க வேண்டும் என்று முயற்சி செய்தார். ஆனால் அத்தனையையும் எடப்பாடி பழனிசாமி முறியடித்துவிட்டார்.. அதிமுகவை சரியான பாதையில் அழைத்து செல்கிறார்.. அதனால்தான் அவரது படத்தையும் மோடியின் கோயிலில் மாட்டி வைத்திருக்கிறேன்.
பண வசதி
என்னால் பெரிய படிப்பு படிக்க முடியாவிட்டாலும் என் குழந்தைங்களை படிக்க வெச்சுட்டேன்.. என் பொண்ணு தீபா பிளஸ்-2-வில் 1105 மார்க் வாங்கினார்.. ஆனால் டாக்டருக்கு படிக்க வைக்க ஆசைப்பட்டேன்.. ஆனால், கட்-ஆப் மார்க் இல்லை.. பண வசதியும் இல்லை.. அதனால என்ஜினியரிங் படிக்க வெச்சேன்.. இப்போ மோடியின் ஆட்சியின் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் தகுதி வாய்ந்த மாணவர்கள் டாக்டராகும் வாய்ப்பு வந்திருப்பது எனக்கு ரொம்ப சந்தோஷம்.
பூரிப்பு
பிரதமர் கொண்டு வந்துள்ள தூய்மை இந்தியா திட்டம், இலவச கியாஸ் சிலிண்டர் வழங்கும் திட்டம், பயிர் காப்பீடு திட்டம் மூலம் இன்று நாட்டில் கோடிக்கணக்கானவர்கள் பலனடைந்து வருகிறார்கள். இதுபோன்ற திட்டங்களை கொண்டு வந்த மோடியை நான் கடவுளாகவே பார்க்கிறேன். அதனாலதான் அவருக்கு கோவில் கட்ட வேண்டும் கட்டணும்னு முடிவு செய்து, அதன்படியே ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் செலவில் கட்டியும் முடித்துவிட்டேன்" என்கிறார் சங்கர் பூரிப்புடன்.