கட்சி பிரச்சனையால் பாய்கிறார்.. நாகரிகமற்ற வார்த்தைகளால் வெற்று அறிக்கை- ஈபிஎஸ் மீது அமைச்சர் சாடல்!
திருச்சி : எடப்பாடி பழனிசாமி வேளாண் துறையின் செயல்பாடுகள் குறித்து, நாகரிகமற்ற வார்த்தைகளை பயன்படுத்தி பொய்யான வெற்று அறிக்கைகளை வெளியிட்டு வருவதாக உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.
Recommended Video
திருச்சியில் இன்று வேளாண் உட்கட்டமைப்பு நிதி கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தமிழக உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார்.
இந்தக் கருத்தரங்கில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், முதல் நாளில் முதலமைச்சர் ஆக்கியவரை, மறுநாளில் தூக்கி எறியக்கூடிய மனப்பக்குவம் உள்ளவர் தமிழகத்தில் முதல்வராக இருந்திருக்கிறார் என எடப்பாடி பழனிசாமியை சாடிப் பேசியுள்ளார்.

அமைச்சர் பன்னீர்செல்வம்
அப்போது பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் 12 ஆண்டிற்கு தமிழ்நாட்டிற்கு 5,990 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம் 15 முதல் 20 சதவீதம் வரை அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்புகளை குறைக்க முடியும், இத்திட்டத்தின் மூலம் தொடக்க வேளாண்மை கடன் சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், தொழில் முனைவோர்கள் ஆகியோர் பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளார்.

நாகரிகமற்ற வார்த்தைகளால் அறிக்கை
மேலும் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வேளாண் துறையை விமர்சித்து அறிக்கை வெளியிட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார். அமைச்சர் பன்னீர்செல்வம் பேசுகையில், "கட்சியை தக்க வைப்பதற்காக எடப்பாடி பழனிச்சாமி வேளாண் துறையின் செயல்பாடுகள் குறித்து, நாகரிகமற்ற வார்த்தைகளை பயன்படுத்தி பொய்யான வெற்று அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.

கடந்த ஆட்சியில் முயற்சியே செய்யவில்லை
நல்ல விதைகளை பயன்படுத்தி அதிக மகசூலை ஈட்டுங்கள் என நாங்கள் விவசாயிகளுக்கு தெரிவித்து வருகிறோம். அதற்காக புதிய ரக விதைகளை உற்பத்தி செய்யும் பணி வேளாண் விஞ்ஞானிகள் மூலம் நடைபெற்று வருகிறது. இதற்கான காலதாமதம் இயற்கையானது. ஆனால் கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சியில் விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் புதிய ரக விதைகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கான முயற்சியிலும் அவர்கள் ஈடுபடவில்லை.

மறுநாள் தூக்கி எறிபவர்கள்
கடந்த ஆட்சியின் போது நோய் தாக்கமில்லா, விவசாயிகளுக்கு பயன் தரக்கூடிய விதைகளை உற்பத்தி செய்ய தவறிவிட்டார்கள். ஆனால் தோட்டக்கலைத் துறையில் உரத்தை விற்பதாக நேற்றைய தினம் அறிக்கை விட்டு இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆனால் நடப்பாண்டு 5 லட்சத்து 90 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்துள்ளோம். முதல் நாளில் முதலமைச்சர் ஆக்கியவரை, மறுநாளில் தூக்கி எறியக்கூடிய மனப்பக்குவம் உள்ளவர்தமிழகத்தில் முதல்வராக இருந்திருக்கிறார்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications