திமுகவுக்கு ஓட்டு போட்டால் வீடு கூட இருக்காது..சுருட்டிருவாங்க..போட்டு தாக்கிய ஸ்ரீரங்கம் வேட்பாளர்!
திருச்சி: அ.தி.மு.க.வுக்கு ஓட்டுபோட்டால் அனைத்து வசதிகளும் வீடு வந்து சேரும், தி.மு.க.வுக்கு ஓட்டுபோட்டா நம்ம வீடுகூட நம்மகிட்ட இருக்காது. என்று ஶ்ரீரங்கம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கு.ப. கிருஷ்ணன் தேர்தல் பிரசாரத்தில் கூறினார்.
தி.மு.க.வின் உறுப்பினர்கள் முறையற்ற வார்த்தைகளை பேசி தாய்மையின் புனிதத்தை கொச்சைப்படுத்தி வருகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
தீவிர வாக்கு சேகரிப்பு
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க.சார்பில் போட்டியிடும் கு.ப. கிருஷ்ணன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மணிகண்டம் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அளுந்தூர், கோடங்கிப்பட்டி, குள்ளம்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் வாக்கு வேட்டையில் ஈடுபட்ட கு.ப. கிருஷ்ணன், 'இனாம்குளத்தூர் பகுதி மக்களுக்காக, இந்தியன் ஆயில் நிறுவனம் இருக்கும் பகுதியில் உள்ள குளத்தை தூர்வாரி நீர் சேமித்து வைக்க வழிவகை செய்யப்படும்.
வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும்
அம்மாபேட்டை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதி மக்களுக்கு பெண்களுக்கான வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்படும். அப்பகுதியில் புதிய தொழிற்சாலை நிறுவ முயற்சிகள் எடுக்கப்படும் என்றும் கூறினார். மாத்தூரில் பகுதியில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த விவசாய கூலி தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்த தகு.ப. கிருஷ்ணன், அவர்களிடம் வாக்கு சேகரித்தார். இதேபோல் இனாம்குளத்தூர் பகுதியில் 100 நாள் வேலைதிட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த பெரியவர்கள் மற்றும் பெண்களிடம் அரசின் நல திட்டங்களை எடுத்துச் சொல்லி வாக்கு சேகரித்தார்.
அ.தி.மு.க.வின் பெருந்தன்மை
பின்னர் பொதுமக்கள் மத்தியில் பேசிய கு.ப.கிருஷ்ணன் கூறியதாவது:- என்னுடைய வசதிக்கு காரணம் என்னுடைய உழைப்புதான். நான் தி.மு.க.வினரை போல ஆற்று மணலை கொள்ளையடித்தோ, அடி மனையை அபகரித்தோ, கட்டப்பஞ்சாயத்து செய்தோ வருவாயைப் பெருக்கிக் கொள்ளவில்லை. தி.மு.க.வில் போட்டியிடும் எதிர்க்கட்சி வேட்பாளர் நான் எந்த நல்லது கெட்டதுக்கும் செல்வதில்லை என்று கூறுகிறார்.
ஆனால் அந்த வேட்பாளரின் துணைவியார் இறப்பிற்கு கட்சிப் பாகுபாடின்றி நான் நேரில் சென்று ஆறுதல் கூறிவிட்டு வந்தேன் அதுதான் அதிமுகவின் பெருந்தன்மை.
தி.மு.க.க்கு ஓட்டு போட்டால் வீடு இருக்காது
ஆனால் திமுகவின் உறுப்பினர்களோ முறையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி தாய்மையின் புனிதத்தை கொச்சைப்படுத்தி வருகிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்குமா என்பதை நீங்களே சிந்தித்து பாருங்கள். அதிமுகவிற்கு ஓட்டுபோட்டால் அனைத்து வசதிகளும் வீடு வந்து சேரும், திமுகவிற்கு ஓட்டுபோட்டா நம்ம வீடுகூட நம்மகிட்ட இருக்காது எல்லாதையுமே உருட்டி, சுருட்டி எடுத்துகிட்டு போய்டுவாங்க. மக்களே சிந்தித்து வாக்களீயுங்கள் என்று கு.ப. கிருஷ்ணன் கூறினார்.