திருச்சியில் ஜாக்டோ,ஜியோ நிர்வாகிகளுக்கு நோட்டீஸ்.. சஸ்பென்ட் நடவடிக்கை தொடக்கம்
Recommended Video
திருச்சி:திருச்சியில் தொடர் போராட்டம் நடத்திய ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த 2,521 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் கடந்த 22-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேலை நிறுத்தத்தில் குதித்து உள்ள ஆசிரியர்கள் தினமும் ஆர்ப்பாட்டம், மறியல் என பல போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அதனால், அரசு பள்ளிகள் குறிப்பாக தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகள் திறக்கப்படவில்லை. ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என நீதி மன்றம் உத்தரவிட்டும், போராட்டம் முடிவுக்கு எட்டப்பட வில்லை.
சஸ்பென்ட் நடவடிக்கை
இதற்கிடையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் சங்க நிர்வாகிகள் 450 பேர் மாநிலம் முழுவதும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
விண்ணப்பங்கள் வரவேற்பு
கல்வி மாவட்டம் வாரியாக தகுதி வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. திருச்சி கல்வி மாவட்டத்தை பொறுத்தவரை திருச்சி மாநகரம், திருச்சி மேற்கு, அந்தநல்லூர், திருவெறும்பூர் கல்வி சரகத்திற்கு உட்பட்டவர்களிடம் நேற்று திருச்சி வெஸ்ட்ரி பள்ளியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
ஆசிரியர் பணியிடம்
முன்னதாக பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதனால் பட்டதாரிகளும், ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களும் விண்ணப்பம் செய்வதற்காக அங்கு வந்து குவிந்தனர்.
பல பெண்கள் குழந்தையுடன் விண்ணப்பம் பெற வந்து இருந்தனர். ஆனால், விண்ணப்பம் பெறுவதற்கான இடம் மாற்றப்பட்டு விட்டது என கூறியதால் அனைவரும் வெஸ்ட்ரி பள்ளிக்கு சென்றனர். இதில் பாதிக்கப்பட்ட பெண்கள் அதிகாரிகள் தங்களை வேண்டும் என்றே அலைய விடுவதாக குற்றம் சாட்டினார்கள்.
பாடம் சொல்லித்தரப்படும்
திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன் கூறுகையில், ‘திருச்சி மாவட்டத்தில் 3 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்து உள்ளனர். ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் படித்து வரும் பயிற்சி ஆசிரியர்கள் மூலம் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படும். பள்ளிகளை மூடுவதற்கு யார் வந்தாலும் அவர்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்றார்.
ஆட்சியரகம் அறிவிப்பு
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ஜாக்டோ-ஜியோ போராட்டம் தொடர்பான கோரிக்கைகளுக்கு தமிழக அரசு சார்பில் தெளிவான பதில் வழங்கப்பட்டு விட்டது.எனவே போராட்டத்தை கைவிட்டு அனைவரும் பணிக்குத் திரும்ப வேண்டும்.
சட்ட ரீதியான நடவடிக்கை
போராட்டத்துக்கு தூண்டினாலோ அல்லது பள்ளிகளின் செயல்பாடுகளில் குறுக்கீடுகள் செய்தாலோ சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். பணிக்கு வரும் ஆசிரியர்கள் வழக்கம் போல அவர்கள் பணி புரிந்து வந்த பள்ளியிலேயே பணியேற்கலாம்.
பணியிட பட்டியல்
பணியில் சேராத ஆசிரியர்களின் பணியிடங்கள் காலிப்பணியிடங்களாக கருதப்பட்டு, உத்தேச காலிப்பணியிடப் பட்டியல் தயாரிக்கப்படும். அதன்படி தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்று கூறப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்
இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த 2,521 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்களுக்கு துறை ரீதியாக நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மத்தில் இந்த விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.