திமுக உறுப்பினர் அட்டையை திருப்பிக் கொடுத்த கட்சிக்காரர்! திகைத்துப் போன அமைச்சர் நேரு மகன்!
திருச்சி: திருச்சியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், அமைச்சர் கே.என்.நேருவின் மகனிடம் திமுககாரர் ஒருவர் கட்சியின் உறுப்பினர் அட்டையை திருப்பிக் கொடுக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அமைச்சர் கே.என்.நேருவின் சொந்த தொகுதியான திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு வேட்டி, சேலைகள் வழங்கும் நிகழ்ச்சிகள் கடந்த சில நாட்களாக அவரது ஆதரவாளர்கள் மூலம் நடத்தப்படுகின்றன. அமைச்சர் நேரு, தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் பிசியாக இருப்பதால் அவர் சென்னையில் முகாமிட்டுள்ளார். இதனால் அமைச்சர் நேருவுக்கு பதில் அவரது மகன் அருண் நேருவை அழைத்துச் சென்று இந்த நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள் ஆதரவாளர்கள்.

அந்த வகையில் மேட்டுத் தெரு, பஞ்சவர்ண சாமி கோயில் தெரு, கீழத் தெரு என பல பகுதிகளில் வேட்டி சேலைகள் வழங்கச் சென்றார் அருண் நேரு. அப்போது அங்கு வந்த திமுக காரர் ஒருவர், தங்கள் பகுதியில் கழிவுநீர் கால்வாய் அடைத்துக்கொண்டதால் கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்பதாகவும், இதனால் கொசுத் தொல்லையால் பாதிக்கப்படுவதாகவும் கூறியதோடு மாநகராட்சி பொறியாளர்கள், அதிகாரிகள் யாரும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி அமைச்சர் நேரு மகன் அருணிடம் நேரடியாக குமுறினார்.
இதனால் அமைச்சர் நேரு மகன் அருகில் நின்று கொண்டிருந்த மேயர் அன்பழகன் பதற்றமானார். இனிமேல் தனக்கு திமுக உறுப்பினர் அட்டை எதற்கு என வினவி அந்த அட்டையை அமைச்சர் மகனிடம் திருப்பிக் கொடுக்க முயன்றார். உடனே அமைச்சர் நேரு ஆதரவாளர்கள் அந்த நபரை அங்கிருந்து முரட்டுத்தனமாக அப்புறப்படுத்துவதில் குறியாக இருந்தனர். ஆனால் அமைச்சர் மகன் அருண் நேருவோ, ஆதரவாளர்களை கடிந்துகொண்டதுடன் என்ன பிரச்சனை என்று எழுதிக்கொடுக்குமாறும் மேயரிடம் சொல்லி நடவடிக்கை எடுப்பதாகவும் தன்னிடம் குமுறிய நபரை சமாதானம் செய்தார்.
பிறகு ஒரு கட்டத்தில் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, கட்சி நிர்வாகிகளை வேட்டி, சேலை வழங்கச் சொல்லிவிட்டு அப்செட்டுடன் பாதியிலேயே வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டார் அமைச்சர் நேரு மகன் அருண்.











Click it and Unblock the Notifications