திருச்சி இல்லையென்று சொன்னால் ராமநாதபுரம்! திமுகவிடம் காய் நகர்த்தும் திருநாவுக்கரசர்! என்ன பின்னணி?
திருச்சி: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சியில் மீண்டும் களமிறங்க விரும்பும் காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர், ஒரு வேளை அந்தத் தொகுதி கிடைக்காவிட்டால் ராமநாதபுரம் தொகுதியிலாவது களமிறங்கிவிட வேண்டும் என காய் நகர்த்துகிறாராம்.
ராமநாதபுரம் தொகுதியை பொறுத்தவரை இந்த முறை திமுகவே நேரடியாக போட்டியிடக் கூடும் எனத் தெரிகிறது. திமுக மாணவரணி தலைவர் வழக்கறிஞர் ராஜீவ்காந்தி இதற்காக காய் நகர்த்தி வரும் வேளையில், திருநாவுக்கரசரும் ராமநாதபுரம் தொகுதி மீது ஒரு கண் வைத்திருக்கிறார். தாம் சார்ந்த முக்குலத்தோர் சமுதாய வாக்குகளும், காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டளிக்கும் சிறுபான்மை சமுதாயத்தினர் வாக்குகளும் தன்னை கரை சேர்த்துவிடும் எனக் கணக்குப் போடுகிறார் திருநாவுக்கரசர்.

திருச்சியில் மீண்டும் போட்டியிட வேண்டும் என்பதே திருநாவுக்கரசர் எம்.பி.யின் விருப்பம். 100க்கு 70% திருச்சியை குறி வைத்து களப்பணிகளை தொடங்கியிருந்தாலும் கடைசி நேர அரசியல் மாற்றத்தால் எதுவும் நடக்கலாம் என்பதால், இப்போதே உஷாராக கூடுதலாக ராமநாதபுரம் தொகுதி பக்கமும் பார்வையை பதித்து வருகிறார் திருநாவுக்கரசர். இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால், தன்னை அரசியலில் அடையாளம் காட்டிய அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்குள் வருவது தான்.
அதுமட்டுமல்ல ராமநாதபுரம் தொகுதியில் ஏற்கனவே கடந்த 2014ஆம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் கூட்டணியின்றி தனித்து களம் கண்டு கணிசமான வாக்குகளை பெற்றவர் திருநாவுக்கரசர். எல்லாம் சரி, முஸ்லீம் லீக் நிலை என்ன என்ற கேள்வி எழுவது புரிகிறது. அநேகமாக முஸ்லீம் லீக்கிற்கு திருச்சி அல்லது மயிலாடுதுறை தொகுதி கொடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.
வரும் மக்களவைத் தேர்தலில் மீண்டும் போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள திருநாவுக்கரசர் தனது சோர்ஸ்கள் மூலம் ராகுல் காந்தியின் நெருங்கிய வட்டத்திற்குள் நுழையும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இப்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் கூட ராகுலுடன் மிகவும் இணக்கம் காட்டி வருகிறார் திருநாவுக்கரசர்.












Click it and Unblock the Notifications