அமித்ஷாவின் மாயாஜால வித்தைகள் இங்கு எடுபடாது... தமிழகம் தனித்துவமானது... ஜவாஹிருல்லா விமர்சனம்..!
திருச்சி: அமித்ஷாவின் அரசியல் மாயாஜால வித்தைகள் தமிழகத்தில் எடுபடாது என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
தமிழகம் எப்போதும் தனித்துவமானது என்பது மீண்டும் நிரூபணமாகும் என அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது;

அரசு நிகழ்ச்சி
''முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வா் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோா் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி தொடரும் என அரசு நிகழ்ச்சியில் அறிவித்து இருக்கிறார்கள். அதை அமித்ஷாவும் ஆமோதித்துள்ளார். அரசு நிகழ்ச்சியில் அரசியல் பேசுவது மரபுகளை மீறிய செயல்''.

பிசிசிஐ-ல் பொறுப்பு
''பாஜக வாரிசு அரசியலை விரும்பாது என அமித்ஷா கூறுகிறார். இதை விட பெரிய நகைச்சுவை வேறு இருக்க முடியாது. அமித்ஷாவின் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி அவர் மகன் ஜெய்ஷா பிசிசிஐ கிரிக்கெட் வாரியத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். இது ஊரறிந்த ஒன்று. எப்போது மத்தியில் பாஜக ஆட்சியை பிடித்ததோ, அப்போது இருந்தே தமிழகத்தின் உரிமைகள் பறிபோய் வருகின்றன''.

அதிமுக தோல்வியடையும்
''மக்களவைத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி தோல்வி அடைந்தது போல சட்டமன்ற தேர்தலிலும் படுதோல்வி அடையும். வரும் தேர்தலில் திமுக ஆட்சியமைக்கும். உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்படுவது ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் செயல். அமித்ஷா நிகழ்ச்சியில் கொரோனா கட்டுப்பாடு பின்பற்றப்படவில்லை''.

தமிழகத்தில் பலிக்காது
''தமிழகத்திற்கு என தனி அரசியல் கலாச்சாரம் இருக்கிறது. தமிழக மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு அதிகம். அமித்ஷாவின் மாயாஜால வித்தைகள் இந்தியாவின் பிற மாநிலங்களில் வேண்டுமானால் எடுப்பட்டிருக்கலாம், ஆனால் தமிழகத்தில் எடுபடாது''.












Click it and Unblock the Notifications