தமிழகத்தின் நாளைய முதல்வராக சரித்திரம் படைக்கலாம் - ஸ்டாலினுக்கு காதர் மொகிதீன் வாழ்த்து
தமிழகத்தை தலைநிமிரச் செய்திடும் நாளைய முதல்வராக நீங்கள் சரித்திரம் படைக்க தமிழகம் காத்து நிற்கிறது வாருங்கள் வரலாறாய் வாழுங்கள் என்று மு.க. ஸ்டாலினுக்கு பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் வாழ்த்து கூறி
திருச்சி: அரசியல் நகர்வுகளை அறவழியில் நெறிப்படுத்தி, தமிழகத்தை தலைநிமிரச் செய்திடும் நாளைய முதல்வராக நீங்கள் சரித்திரம் படைக்க தமிழகம் காத்து நிற்கிறது. வாருங்கள் வரலாறாய் வாழுங்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் வாழ்த்து கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கை:
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக மூன்றாம் ஆண்டு மக்கள் பணியில் தொடரும் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக மக்களின் இதயங்களில் எந்நாளும் நிலைத்திருக்கும் வரலாற்று நாயகர், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் வழி நின்று, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கண்ணியமிக்க காயிதே மில்லத் என நாடுபோற்றும் தலைவர்களின் வழிகாட்டுதலை உள்ளத்தில் ஏற்றி, தமிழ் மொழிக்கும் தமிழ் மண்ணுக்கும் அயராது ஆற்றிடும் தங்களின் அரும்பணிகள் பல்லாண்டு தொடரவேண்டும்.
'தந்தை வழியே தனயன் வழி' என ஓயாத உழைப்பின் உருவகமாய், 'நமக்கு நாமே' என தொடர் பயண முழக்கமிட்டு, அனைத்து தரப்பு மக்களையும் நேரில் கண்டு, அவர்களின் எண்ண ஓட்டத்தை முழுமையாய் அறிந்திருக்கும் உங்களின் தலைமையிலான தமிழகமே மக்கள் பிரச்சனைகளுக்கான ஒரே தீர்வாக அமையும்.
செப்டம்பர் மாதம் ரேசனில் இலவச அரிசி வாங்க சனிக்கிழமை முதல் 4 நாட்களுக்கு டோக்கன் விநியோகம்
விவசாயம், வணிகம், கல்வி, பொருளாதாரம் என அனைத்து துறைகளும் வீறுகொண்டு எழும் எழுச்சிமிக்க தமிழகமாய் சீரமைத்து, வரலாறு படைத்திடும் ஆற்றல் உங்களுக்குண்டு. நேர்கொண்ட பார்வை, தெளிவான சிந்தனை, நிதானமிக்க நிர்வாகம், அனைவரையும் அரவணைக்கும் மாண்பு, ஏழை எளியவர்களின் துயர்துடைக்கும் பண்பு, தேசிய ஒருமைப்பாட்டின் பேரங்கம் என நிறைவாய் பெற்றிருக்கும் தங்களின் அரசியல் பயணம் ஒரு நூற்றாண்டு பயணமாய் மிளிர்ந்திட வாழ்த்துகிறேன்.
அனைத்து தரப்பு மக்களின் வாழ்வியலை உயர்த்தி, சிறுபான்மை மற்றும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான சமூக நீதியை நிலைநிறுத்தி, மக்களாட்சி தத்துவத்தை ஜனநாயக வழியில் செயல்படுத்தி, அரசியல் நகர்வுகளை அறவழியில் நெறிப்படுத்தி, தமிழகத்தை தலைநிமிரச் செய்திடும் நாளைய முதல்வராக நீங்கள் சரித்திரம் படைக்க தமிழகம் காத்து நிற்கிறது. வாருங்கள்; வரலாறாய் வாழுங்கள்; வாஞ்சையோடு வாழ்த்துகிறோம்.