விட்டு கொடுத்த காங்கிரஸ்! திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு!
திருச்சி: திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மதிமுகவுக்கு எந்த தொகுதி ஒதுக்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு தமிழகத்தில் 9 மக்களவை தொகுதியும் புதுவையில் ஒரு தொகுதியையும் ஒதுக்கியுள்ளது. அதன்படி இன்றைய தினம் தொகுதிகளை அடையாளம் காணும் பணிகள் ஆலோசனை செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளன.

அவற்றில் 10 தொகுதிகள் பின்வருமாறு:
திருவள்ளூர் (தனி)
கிருஷ்ணகிரி
சிவகங்கை
விருதுநகர்
கரூர்
கடலூர்
நெல்லை
மயிலாடுதுறை
கன்னியாகுமரி
புதுவை
"நாங்கள் கேட்ட 10 தொகுதிகளும் கிடைத்துவிட்டது" என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இந்த 10 இல் சில மாற்றங்கள் உள்ளன. அதாவது காங்கிரஸ் கட்சி திருச்சியை விட்டுக் கொடுத்துவிட்டு மயிலாடுதுறையை பெற்றுள்ளது.
அது போல் தேனிக்கு பதில் நெல்லையை பெற்றுள்ளது. அது போல் ஆரணி தொகுதிக்கு பதில் கடலூர் தொகுதி, காங்கிரஸுக்கு கிடைத்துள்ளது. திருச்சி தொகுதியில் இந்த முறை போட்டியில்லை என கடந்த சில தினங்களாக யூகங்கள் வந்த வண்ணம் இருந்தனர். எனவே இந்த முறை திருச்சி தொகுதி மதிமுகவுக்கு கிடைத்துள்ளது.
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு மக்களவை தொகுதியும் ஒரு மாநிலங்களவையும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மதிமுக திருச்சி தொகுதியை கேட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் காங்கிரஸிடம் கேட்டு திருச்சி தொகுதியை திமுக வாங்கிக் கொடுத்துவிட்டது. இதையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிட்டு எம்பியானவர் காங்கிரஸின் எஸ் திருநாவுக்கரசர். இவர் பெற்ற வாக்குகள் 6,21,285 ஆகும். தேமுதிகவின் இளங்கோவன் 1,61,999 வாக்குகளும் சுயேச்சை சாருபாலா தொண்டைமான் 1,00,818 ஆகிய வாக்குகளையும் பெற்றிருந்தனர்.
இந்த தொகுதியில் மதிமுக கடந்த 2004ஆம் ஆண்டு வென்றுள்ளது. எல் கணேசன் எம்பியானார். அவர் 4.50 லட்சம் வாக்குகளை பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பரஞ்ஜோதி 2.34 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளார். அதன் பிறகு 2019 ஆம் ஆண்டு ஈரோடு மக்களவை தொகுதியில் கணேசமூர்த்தி போட்டியிட்டு வென்றார். அவர் மதிமுக சார்பில் போட்டியிட்டாலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார். இந்த முறையும் மதிமுக, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக தலைமை வலியுறுத்தி வருகிறது. ஆனால் மதிமுகவோ தனிச்சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என தெரிவித்துள்ளனர். எனவே இந்த சின்னம் தொடர்பான பிரச்சினை என்னவாகும் என தெரியவில்லை.












Click it and Unblock the Notifications