நிறைவேறும் திருச்சி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை.. நல்ல செய்தி சொன்ன அமைச்சர் கே.என்.நேரு
திருச்சி: திருச்சியில் காவிரி பாலம் வலுவிழந்து உள்ளதால், அந்த பாலத்திற்கு அருகிலேயே ரூ.80 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய காவிரி பாலம் கட்டப்படும் என்று அமைச்சர் கே என் நேரு தெரிவித்தார்,
திருச்சியில் ஸ்ரீரங்கத்தையும் நகரின் மற்ற பகுதிகளையும் இணைப்பது காவிரி பாலம் தான். சுமார் 45 ஆண்டுகள் பழமையான இந்த பாலம் திருச்சி நகரின் அடையாளங்களில் முக்கியமானது.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே இந்த பாலத்தின் நிலைமை மோசமான ஒன்றாக மாறி வருகிறது. இதைச் சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

காவிரி பாலம்
1976ஆம் ஆண்டு இந்த பாலம் திருச்சியையும் ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் வகையில் இந்தப் பாலம் கட்டப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக இந்த பாலத்தின் நிலைமை மோசமடைந்து வருகிறது. ஒருபுறம் பாலத்தின் மேல் சாலையில் ஏற்படும் குண்டு குழிகளைச் சீரமைக்கும் பணியை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. மறுபுறம் லாரி போன்ற கனரக வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு இந்த பாலம் உறுதித் தன்மையை இழந்து வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இதனால் இந்த பாலத்திற்குப் பதிலாக புதியதொரு பாலத்தை அரசு கட்டித் தர வேண்டும் என்பது திருச்சி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

அமைச்சர் கே என் நேரு
இந்நிலையில், திருச்சி உறையூர் குறத் தெரு பகுதியில் மாநகராட்சியில் அரசின் 100 நாள் சாதனையை விளக்கும் கண்காட்சியை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து திருச்சியில் பழுதடைந்த குடிநீர் குழாய்கள் மாற்றி அமைக்கும் பணிக்கான பூமி பூஜை விழாவிலும் அவர் கலந்து கொண்டார்.

அரசு திட்டங்கள்
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், " ரூ.54.27 கோடி செலவில் குடிநீர் அபிவிருத்தி திட்டம் திருச்சி மாநகராட்சி பகுதியில் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 103.425 கி.மீ நீளத்திற்குக் குழாய்கள் அமைக்கப்பட உள்ளது. இதில் 4 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியும் 2 இடங்களில் கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டியம் அமைக்கப்பட உள்ளது. ஒன்றிய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தைத் தமிழ்நாட்டில் செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

புதிய காவிரி மேம்பாலம்
திருச்சியில் சிந்தாமணி - மாம்பழச்சாலை இணைக்கும் காவிரி பாலம் வலுவிழந்து உள்ளது. அந்த பாலத்திற்கு அருகிலேயே ரூ.80 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய காவிரி பாலம் கட்டப்படும். போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் 60 அடி அகலத்தில் திருச்சி நீதிமன்றம் முதல் அல்லித்துறை வரை சாலை விரிவாக்கமும் புதிய சாலைகள் அமைக்கப்படும். அதே போல உறையூர் முதல் வயலூர் வரை நேரடி சாலை அமைக்கப்படும்.

ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்
திருச்சியில் அமைய உள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அருகில் மொத்த மற்றும் சில்லறை மார்கெட் அமைக்கப்படும். திருச்சியில் செயல்படும் வேறு எந்த சந்தைகளும் இடமாற்றம் செய்யப்படாது. மாநகராட்சி விரிவாக்கத்தின் போது மாநகராட்சியோடு இணைக்கப்படும் கிராம பஞ்சாயத்துக்களின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்கள் பதவிக்காலம் முடியும் வரை அப்பதவிகளில் நீடிப்பார்கள். அவர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியரின் நேரடி கண்காணிப்பில் செயல்படுவார்கள். மாநகராட்சியோடு இணைக்கப்படும் கிராம பஞ்சாயத்துக்கள் நீங்கலாகத் தேர்தல் நடத்தப்படும்" என்று அமைச்சர் கே என் நேரு குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications