நான் ஊரில் இருக்கமாட்டேன்... என்னை பார்க்க யாரும் வரவேண்டாம்... அமைச்சர் கே.என்.நேரு அறிவுறுத்தல்..!
திருச்சி: தனது பிறந்தநாளான நவம்பர் 9-ம் தேதியன்று தாம் ஊரில் இருக்கமாட்டேன் என்றும் இதனால் ஆதரவாளர்கள் யாரும் தன்னை நேரில் சந்தித்து வாழ்த்துக்கூற வர வேண்டாம் எனவும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால் இந்தாண்டு தனது பிறந்தநாளை கொண்டாட விரும்பவில்லை என அவர் தெரிவித்திருக்கிறார்.
அமைச்சர் நேருவின் பிறந்தநாளை தடபுடலாக கொண்டாட விரும்பிய அவரது ஆதரவாளர்களுக்கு இந்த அறிவிப்பு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

நேரு பிறந்தநாள்
திமுக முதன்மைச் செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான கே.என்.நேருவுக்கு நாளை மறுதினம் நவம்பர் 9-ம் தேதியன்று 70-வது பிறந்தநாள். வயது 70-ஐ தொட்டாலும் அவரிடம் உள்ள சுறுசுறுப்பும், வேகமும், 50 வயதுடையவரை போல் தான் காட்டும். ஆண்டுதோறும் தனது பிறந்தநாளன்று சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்ற கையோடு, விமானம் பிடித்து திருச்சிக்கு சென்று அங்கு தனது ஆதரவாளர்களின் வாழ்த்து மழையில் நனைவது கே.என்.நேருவின் வழக்கம்.

பிறந்தநாள் விருந்து
திருச்சி தில்லை நகரில் உள்ள இவரது அலுவலகத்தில் பிறந்தநாள் விருந்து கூட நடைபெறும். தற்போது அவர் திமுகவில் முதன்மைச் செயலாளராக இருப்பதால், திருச்சி மாவட்டத்தை கடந்து மாநிலம் தழுவிய அளவில் அவரை காண ஏராளமான நிர்வாகிகள் வந்து செல்கின்றனர். அந்த வகையில் நாளை மறுதினமும் கே.என்.நேருவை சந்தித்து வாழ்த்துக் கூற தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நிர்வாகிகள் திருச்சிக்கு வர ஆயத்தமாகினர்.

நேரு சிபாரிசு
எதிர்வரும் நகராட்சி, மாநகராட்சி தேர்தல்களில் சீட் எதிர்பார்க்கும் பலரும் நேருவை பிடித்தால் அவர் சிபாரிசில் ஸ்டாலினிடம் சீட் பெற்றுவிடலாம் எனக் கருதி வருகின்றனர். இதனால் வழக்கத்தை விட இந்தாண்டு நேருவுக்கு பிறந்தநாள் வாழ்த்துச்சொல்ல கூட்டம் அதிகம் இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. இத்தகைய சூழலில், மழைவெள்ள பாதிப்பை காரணம் கூறி இந்தாண்டு தாம் பிறந்தநாள் கொண்டாட விரும்பவில்லை எனக் கூறியிருக்கிறார் கே.என்.நேரு.

நேற்றிலிருந்து ஆய்வு
நேற்றிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சென்னை மாநகரம் முழுவதும் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்து வெள்ளநீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டு வருகிறார் அமைச்சர் கே.என்.நேரு. இதனிடையே புயலே வீசினாலும் கூட நவம்பர் 9-ம் தேதியன்று சென்னைக்கு சென்று அமைச்சர் கே.என்.நேரு முன் ஆஜராகிவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது திருச்சி மாவட்டத்தில் உள்ளனர் அவரது ஆதரவாளர்கள் குழு.












Click it and Unblock the Notifications