"மக்களை தேடி மருத்துவம் திட்டம் பற்றி சுவிஸ் மாநாட்டில் பேச அழைப்பு" மா.சுப்பிரமணியன் பெருமிதம்!
திருச்சி: தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவம் திட்டம் குறித்து ஸ்விட்சர்லாந்து மாநாட்டில் பேச அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
திருச்சி ஜமால் முகமது கல்லூரி வளாகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பருவ கால நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், காய்ச்சல் முகாம்கள் மற்றும் பொது சுகாதார பணிகள் குறித்த மாநில அளவிலான ஆய்வுக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு, சுகாதார துறை செயலாளர் செந்தில் குமார் மற்றும் சுகாதார துறை இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.

மா.சுப்பிரமணியன் பேச்சு
இந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசுகையில், 385 ஒன்றியத்தில் உள்ள வட்டார மருத்துவ அலுவலர்களை ஒரே இடத்தில் வரவழைத்து, மாநில அளவில் நடத்தும் முதல் கூட்டம் இது. பொது சுகாதார துறையை பொறுத்தவரை அந்த அந்த மாவட்டம், மண்டல அளவில் நடத்துவோம். ஆனால் தமிழகத்தில் இருந்து அனைத்து பிடிஓ-க்களையும் அழைத்து நடத்தும் முதல் கூட்டம் இதுதான்.

கட்டுக்குள் டெங்கு காய்ச்சல்
தமிழகத்தில் 96 சதவிகிதம் பேருக்கு முதல் தவணையும், 92 சதவிகிதம் பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்தி உள்ளோம். 96% மக்கள் நோய் எதிர்ப்பு சக்தியோடு உள்ளனர். அதனால் கொரோனோ இறப்பு 6 மாதமாக இல்லை. ஹெச்1 என்1 வைரஸ் பாதிப்பு 381 பேருக்கு இருந்த நிலையில், தற்போது வெறும் 10 பேருக்கு மட்டுமே உள்ளது. தமிழகத்தில் கடந்த 10 மாதத்தில் வெறும் 2 பேர் தான் டெங்குவால் உயிரிழந்தனர். தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது.

மக்களை தேடி மருத்துவம்
உலகத்திற்கே வழிகாட்டியாக மக்களை தேடி மருத்துவம் திட்டம் உள்ளது. ஸ்விட்சர்லாந்தில் உலக பொருளாதார மாநாடு நடக்க உள்ளது. அங்கு என்னை மக்களை தேடி மருத்துவம் திட்டம் குறித்து விளக்க அழைத்து உள்ளனர். மத்திய சுகாதார துறை அமைச்சரே, இந்தத் திட்டம் குறித்து தொடர்ந்து தமிழக அரசை பாராட்டி வருகிறார் என்று தெரிவித்தார்.

5 புதிய மருந்து கிடங்குகள்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து மா.சுப்பிரமணியன் கூறுகையில், 21 மாநகராட்சி, 63 நகராட்சிகளில் புதிதாக 708 மருத்துவமனைகளை திறப்பது தொடர்பாக இன்று கட்டத்தில் ஆலோசனை செய்ய உள்ளோம். மேலும் 25 ஆரம்ப மற்றும் நகர்புற சுகாதார நிலையங்களை திறக்க முதல்வர் சமீபத்தில் அறிவித்து இருந்தார். அதற்கான ஏற்பாடுகள் குறித்தும் இந்த கூட்டத்தில் கேட்க உள்ளோம். தமிழகத்தில் புதிய 5 மருந்து கிடங்குகள் கட்ட முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு என்பது இல்லை.

விரைவில் செவிலியர் நியமனம்
அதேபோல் 4307 காலி பணியிடங்கள் என கண்டறியப்பட்டு செவிலியர்களை நியமனம் செய்ய ஏற்பாடு செய்துள்ளோம். இதில் தற்போது 1021 பேருக்கு கலந்தாய்வு நடத்தி உள்ளோம். இரண்டு மாதத்தில் காலியாக உள்ள செவிலியர்கள் பணி நிரப்பப்படும். தமிழகத்தில் மருத்துவர்களுக்கு சம்பளம் உயர்த்தி தரவேண்டும் என்கிற கோரிக்கை உள்ளது. அந்த விவகாரத்தில் இரு தரப்பிலான மருத்துவ சங்கங்கள் வெவ்வேறு விதமான கோரிக்கையை முன் வைக்கின்றனர். இது தொடர்பாக 18 முறை இரண்டு சங்கங்களையும் அழைத்து பேசி உள்ளோம். விரைவில் அதற்கான முடிவு எட்டப்படும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications