திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்
திருச்சி: இந்த முறுக்கு 15 ஆம் தேதி உற்பத்தி பண்ற தேதி Date இருக்கு.. சரி.... இது 15 ஆம் தேதிதான் தயார் பண்ணதுக்கான ஆதாரம் உங்ககிட்ட என்ன இருக்கு... என்ன ஒரு புத்திசாலித்தனம்....கககபோ.. உலகத்துல யாரும் கேட்காத கேள்வி...இந்த வருடம் நோபல் பரிசை இந்தாளுக்கே கொடுத்துடுங்க என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷை கிண்டல் செய்து வருகிறார்கள்.மீம்ஸ் போட்டும் வருகிறார்கள். இதற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அளித்த விளக்கத்தை பார்ப்போம்.
" தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள் வழிகாட்டுதலில், திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் 24.05.2026 அன்று நான் மேற்கொண்ட ஆய்வில் திருக்கோயில் வளாகத்தில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் உறையில், ஒப்பந்தப்புள்ளி நிபந்தனைகள் அடிப்படையில் Bar Code Sticker, தயாரிப்பு தேதி (Mfg Date), காலாவதி தேதி (Exp date) ஆகியவை இடம் பெறாமல் இருப்பது தெரிய வந்தது.

சில உணவு பொருட்களின் உறையில் துண்டு சீட்டில் தயாரிப்பு தேதி எழுதி வைக்கப்பட்டும், எந்த வித விவரங்களும் இல்லாமல் இருந்ததும் கண்டறியப்பட்டது. மேலும் தயாரிப்பு தேதி சில பொருட்களில் துண்டு சீட்டில் கையில் எழுதி வைத்திருந்தது உண்மையான தயாரிப்பு தேதியா என்ற சந்தேகத்தையும் எழுப்பும் வகையில் இருந்தது கண்டறியப்பட்டது.
உடனடியாக இதை சரியாக கண்காணிக்காத திருக்கோயில் அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது. மேலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து திருக்கோயில்களிலும் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் தரத்தை உறுதி செய்திட அனைத்து திருக்கோயில் அதிகாரிகளுக்கும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.
திருக்கோயில் வளாகத்தில் பக்தர்கள் குடிநீர் குடிக்க அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட (RO) குடிநீரின் தரம் ஆய்வு செய்யப்பட்டதில் TDS (Total Dissolved Solids) அளவானது அனுமதிக்கப்பட்ட அளவில் பராமரிக்கப்படவில்லை என்பதும் கண்டறியப்பட்டு இதனை சரிசெய்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் பயன்படுத்தும் கழிப்பறைகள் ஆய்வு செய்யப்பட்டு தினசரி 3 முதல் 5 முறை முழுமையாக தூய்மை செய்யப்பட வேண்டும் என்றும் கழிப்பறை தூய்மை செய்வதை கண்காணிக்க, கழிப்பறை வாயிலில் Daily Cleaning Checklist ஒட்டப்பட்டு அதில் தினசரி தூய்மை செய்து, கையொப்பமிட்டு ஆவணப்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
திருக்கோயில்களில் அடிப்படை வசதிகளிலும், உணவுப் பொருட்கள் விற்பனை போன்ற எந்தவித விடயத்திலும், குறைபாடுகளோ முறைகேடோ இருக்கும் பட்சத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
அனைத்து கோயில்களிலும் அடிப்படை வசதிகள் சரியாகவும், தரமாகவும் பக்தர்களுக்கு கிடைப்பதை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான அரசு உறுதிசெய்யும். " இவ்வாறு அமைச்சர் ரமேஷ் கூறியுள்ளார்.














Click it and Unblock the Notifications