ஊழலுக்கு இடம் தராதீர்... விசுவாசமாக இருங்கள்... உருக்கமும், கண்டிப்பும் கலந்து ஸ்டாலின் பேச்சு
திருச்சி: ஊழலுக்கு துளியும் இடம் கொடுத்துவிட வேண்டாம் என திமுக உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நடைபெற்ற திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் பேசிய அவர் இதனை மிகவும் கண்டிப்புடன் தெரிவித்தார். திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் வெளிப்படை தன்மையுடன் செயல்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
திமுக உள்ளாட்சி பிரதிநிதிகளின் செயல்பாடு 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு வெற்றியை தேடி வரும் வகையில் இருக்க வேண்டும் என ஸ்டாலின் கூறினார்.
சட்டமன்ற தேர்தலில் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்க... ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்த உதயநிதி
ஸ்டாலின் பேச்சு
திருச்சியில் நடைபெற்ற திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய மு.க.ஸ்டாலின், அவர்களுக்கு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கினார். சில விவகாரங்களில் கண்டிப்பும் காட்டினார். திமுக மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு நல்ல திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெறுவதற்கு உள்ளாட்சி பிரதிநிதிகள் மேற்கொள்ளும் பணிகள் முக்கிய பங்காற்றும் என ஸ்டாலின் பேசினார்.
சுதந்திரம்
திமுக உள்ளாட்சி பிரதிநிதிகளை ஆளுங்கட்சியினர் சுதந்திரமாக செயல்படவிடமாட்டார்கள் என தனக்குத் தெரியும் என்றும், பல்வேறு இடையூறுகளை அமைச்சர்கள், ஆளுங்கட்சிக்கு துணை போகும் அதிகாரிகள் கொடுக்கக் கூடும் எனவும் கூறினார். ஆனால் அப்படி எந்த இடையூறுகள் வந்தாலும், எந்த நேரத்திலும் ஆளுங்கட்சியுடன் மட்டும் கைகோர்த்துவிட வேண்டாம் என ஸ்டாலின் மிகவும் கண்டிப்புடன் தெரிவித்தார். ஆளுங்கட்சியின் சதி வலையில் விழுந்து கெட்ட பெயர்களை சம்பாதிக்க வேண்டாம் என திமுக உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு ஸ்டாலின் அறிவுரை கூறினார்.
விசுவாசம் முக்கியம்
மேலும், உள்ளாட்சி பிரதிநிதிகள் கட்சித் தலைமைக்கும், நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கும் விசுவாசமாக இருக்க வேண்டும் என ஸ்டாலின் உருக்கமுடன் கேட்டுக்கொண்டார். சட்டமன்றத் தேர்தல் இன்னும் ஒரே ஆண்டில் வரும் என்றும், அப்படி தேர்தல் வந்தால் உறுதியாக திமுக தான் ஆட்சிக்கு வரும் எனவும், அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். திமுக ஆட்சி அமைந்தவுடன் மக்கள் பணிக்கு தேவையான முழு உதவியும் செய்து தருவேன் என உள்ளாட்சி பிரதிநிதிகளிடன் உறுதியளித்தார்.
சத்தியம்
பொதுவாழ்வில் நியாயமும், தூய்மையாக செயல்படுவோம் என்றும், நாடும், சார்ந்துள்ள கட்சியும் முன்னேற உழைப்போம் எனவும், உள்ளாட்சி பிரதிநிதிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மக்களிடம் செல்வேன், மக்கள் மனங்களை வெல்வேன் இது உறுதி..உறுதி..உறுதி.. என ஸ்டாலின் உறுதிமொழி வாசிக்க அதை பின் தொடர்ந்து கூறினர் உள்ளாட்சி பிரதிநிதிகள். மாநாடு முடிந்த நிலையில் அதில் கலந்துகொண்ட அனைவருக்கு மதிய உணவு ஏற்பாடு செய்திருந்தார் நேரு.