ஜொலிக்க போகுது திருச்சி.. ஐடி வேலைக்கு இனி சென்னை வேண்டாம்! அதான் பஞ்சப்பூர் டைடல் பார்க் வருதே!
திருச்சி: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புதிய டைட்டில் பூங்கா அமைக்கும் பணிகளில் தமிழ்நாடு அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தற்போது திருச்சி மாவட்டத்தில் பஞ்சாப்பூர் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைய இருக்கும் நிலையில் அதற்கு அருகே டைடல் பார்க் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக கூறுகின்றனர் திருச்சி மாவட்ட அதிகாரிகள். இதனால் தென் மாவட்ட இளைஞர்கள் ஐடி வேலைக்காக சென்னையை நோக்கி செல்வது குறையும் வாய்ப்புள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை சென்னை தகவல் தொழில் நுட்ப துறையில் முன்னணியில் இருக்கிறது. அதே நேரத்தில் பெங்களூருவை ஒப்பிடும் போது, சில காரணங்களால் அந்த நகரத்தை போட்டி ரீதியாக இன்னும் தாண்ட முடியாத சூழலும் இருக்கிறது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் ஐடி துறை சார்ந்த படிப்புகள் படித்த இளைஞர்கள் இருந்தாலும் சென்னையை மட்டுமே அவர்கள் நம்பியிருக்க வேண்டி உள்ளது. இதனால் சிலர் சொந்த ஊரிலேயே குறைந்த சம்பளத்தில் வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.
இதை அடுத்து தமிழகத்தின் முக்கிய நகரங்களில் டைடல் பார்க் அமைக்கும் பணிகளில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. தற்போது சென்னை சோழிங்கநல்லூர், தரமணி, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அவற்றை தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் அழைத்துச் செல்ல இந்த டைடல் பார்க் திட்டங்கள் உதவும்.
ஏற்கனவே தஞ்சாவூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மினி டைடல் பார்க் செயல்பட்டு வரும் நிலையில் தமிழகத்தின் முக்கிய நகரங்களான திருச்சி, மதுரையில் 600 கோடி ரூபாய் செலவில் டைடல் பார்க் அமைக்கப்பட உள்ளது. குறிப்பாக தமிழ்நாடு எலக்ட்ரானிக் கார்ப்பரேஷன் மற்றும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் இணைந்து திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் சுமார் 9 ஏக்கர் பரப்பளவில் டைடல் பார்க் அமைக்க நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்காக ஏற்கனவே கடிதம் அனுப்பப்பட்ட நிலையில் மாநகராட்சியும் இடத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதமே டைடல் பார்க் அமைப்பதற்கான டெண்டர் கோரப்பட்டது. தற்போது டெண்டர் இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதன் கட்டுமான பணிகள் தொடங்கப்பட உள்ளது. சுமார் 10,000 பேர் பணியாற்றும் வகையில் இந்த டைடல் பார்க் அமைக்கப்பட இருக்கிறது. மேலும் தமிழ்நாடு சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், திருச்சி டைடல் பூங்கா பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
தரைத் தளம் மற்றும் ஆறு தளங்களுடன் இந்த டைடல் பூங்கா அமைக்கப்படுகிறது. குறிப்பாக திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு அருகில் இந்த டைட்டில் பூங்கா அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 10,000 இளைஞர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற உள்ளனர். இதனால் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் ஐடி வேலைக்காக சென்னையை நோக்கி செல்வது குறையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications