நெருக்கடி.. திருச்சியில் விஜய் தங்குவதற்கு ஹோட்டல் கிடைக்கவில்லையாம்.. சோகத்தில் தவெக நிர்வாகிகள்!
திருச்சி: திருச்சியில் இருந்து தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்கவிருக்கும் நிலையில், அவர் தங்குவதற்கு ஹோட்டல் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. விஜய் தங்குவதற்கு ஹோட்டலில் அறை கொடுக்க அதன் உரிமையாளர்கள் முன் வரவில்லை என்பதால், தவெக நிர்வாகிகள் விஜய்யின் சுற்றுப்பயணத் திட்டத்தை மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
மதுரையில் தவெகவின் 2வது மாநில மாநாட்டைத் தொடர்ந்து, அடுத்ததாக விஜய் மக்கள் சந்திப்பு பயணத்திற்கு தயாராகி வருகிறார். தவெகவின் முதல் மாநாட்டை விஜய் திருச்சியில் நடத்தவே விரும்பினார். திருச்சி மாவட்டம் திருப்பத்தை கொடுக்கும் என்ற நம்பிக்கை தமிழக அரசியலில் இருப்பதால், விஜய் செண்டிமெண்ட்டாக திருச்சியை தேர்வு செய்திருந்தார். ஆனால் மாநாட்டுக்கு இடம் கொடுக்க யாரும் முன் வரவில்லை.

இதனால் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்தினார். இதனால் மக்கள் சந்திப்பு பயணத்தை திருச்சியில் இருந்து தொடங்க விஜய் முடிவு செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் டெல்டா மாவட்டங்களுக்கு விஜய் இன்னும் ஒருமுறை கூட செல்லவில்லை. இதனால் செப்டம்பர் 13ஆம் தேதி திருச்சி மாவட்டத்தில் இருந்து மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை தொடங்க தவெக முடிவு எடுத்தது.
இதற்கான அனுமதியை பெறுவதற்காக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேற்று காலையிலேயே திருச்சி வந்தார். அவரும் மாவட்டச் செயலாளர் குடமுருட்டி கரிகாலன் இருவரும் சென்று காவல் ஆணையர் அலுவலகத்தில் அனுமதி கோரி கடிதம் அளித்தனர். அப்போது சத்திரம் பேருந்து நிலையத்தில் பிரச்சாரம் செய்ய அனுமதி இல்லை என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஸ்ரீரங்கத்தில் இருந்து பிரச்சாரத்தை தொடங்க விஜய் முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. விஜய் திருச்சியில் 2 நாட்கள் தங்கி அத்தனை தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய முடிவு எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் விஜய் தங்குவதற்கு திருச்சியில் உள்ள ஹோட்டல் அதிபர்கள் இடம் கொடுக்க மறுத்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. அரசியல் நெருக்கடி மற்றும் பாதுகாப்பு பிரச்சனையை காரணமாக கூறுகின்றனர்.
இதனால் சென்னையில் இருந்து அதிகாலையில் திருச்சி வரும் விஜய், பிரச்சாரத்தை முடித்துவிட்டு இரவே சென்னை திரும்புவதற்கு ஏதுவாக திட்டம் வடிவமைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. செப்டம்பர் 13ல் திருச்சி ஸ்ரீரங்கம், டிவிஎஸ் டோல்கேட், தலைமை தபால் நிலையம், மேலப்புதூர், பாலக்கரை ரவுண்டானா பகுதிகளில் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
இதன்பின் அரியலூர் மாவட்டத்தில் பழைய பேருந்து நிலையம், பெரம்பலூரில் குன்னம் பேருந்து நிலையம் ஆகியற்றில் பிரச்சாரம் செய்ய உள்ளார். மொத்தமாக 100 நாட்கள் விஜய் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக தெரிகிறது. அதற்கேற்ப விஜய்யின் பிரச்சார திட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதனால் தவெக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications