ஜெயக்குமார் சொன்ன அந்த வார்த்தை.. “இப்ப பார்த்தியா?”.. மறக்காமல் ‘ரிப்ளை’ கொடுத்த ஓபிஎஸ்!
திருச்சி : முன்பு ஜெயக்குமார் தன்னைப் பற்றி விமர்சித்ததை சுட்டிக்காட்டி அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம். திருச்சி மாநாட்டில் பேசிய ஓபிஎஸ், "பன்னீர்செல்வம் தனியா நின்று டீ ஆத்திக் கொண்டு இருக்கிறார் என்று ஜெயக்குமார் சொன்னார். இப்போது பார்த்தாயா எத்தனை பேர் வந்திருக்கிறார்கள் என்று." எனப் பேசினார்.
எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரித்த நிலையில், கட்சி கிட்டத்தட்ட முழுமையாக ஈபிஎஸ் கைக்குச் சென்றுவிட்டது. இந்நிலையில், தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் மக்கள் மன்றத்தை நாடியிருக்கும் ஓபிஎஸ், அதிமுகவின் முப்பெரும் விழாவினைக் கொண்டாட திருச்சியில் மாநாடு நடத்த ஏற்பாடு செய்தார்.

திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் நேற்று இரவு நடந்த மாநாட்டில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளான பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஜெயக்குமாருக்கு ஓபிஎஸ் பதிலடி : இந்த மாநாட்டில் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தன்னைக் குறித்து பேசியதை குறிப்பிட்டு பதிலடி கொடுத்தார். ஓபிஎஸ் தனியாக நின்று டீ ஆற்றுகிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாக குறிப்பிட்ட ஓபிஎஸ் அவருக்கு தனது ஸ்டைலில் பதில் அளித்தார்.
ஓபிஎஸ் பேசுகையில், "ஜெயக்குமார் ஒரு லூசு.. அவர் சொல்கிறார், பன்னீர்செல்வம் தனியாக நின்று டீ ஆற்றுகிறார் என்று. பார்த்தீர்களா எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று. கட்சி அமைப்பிலுள்ள 33 மாவட்டங்களில் மட்டும் இருந்து இங்கு வந்தவர்கள்தான் இந்த கூட்டம். இன்னும் 55 மாவட்டங்கள் உள்ளன. அந்த மாவட்டங்களிலும் இதுபோன்று தொண்டர்கள் கூடும் மாநாடு உறுதியாக நடக்கும்.
கேடிகள், ரவுடிகள் : எங்கள் வேலை எம்ஜிஆர், ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களை ஒன்று சேர்க்கும் பணி. அப்படி ஒன்று சேர்த்து கட்டுக்கோப்பாக கட்சியை வழிநடத்துவோம்" எனப் பேசினார். மேலும் பேசிய ஓபிஎஸ், "கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒரு பொதுக்குழுவை கூட்டினர். அதிகாலையில் 2000 கேடிகளையும், ரவுடிகளையும் மண்டபத்திற்குள் அனுமதித்தனர். அவைத் தலைவரை நான் முன்மொழிய இருந்தபோது அந்த கேடிகள் கூச்சல் எழுப்பினர்.

அதிமுக பொருளாளர் என்ற முறையில் வருடாந்திர வரவு செலவு கணக்குகளை நான் படித்திருக்க வேண்டும். அதற்குள் அங்கிருந்த ஒரு லூசு சி.வி.சண்முகம், 23 தீர்மானங்களையும் ரத்து செய்வோம் எனத் தெரிவித்து விட்டார். அந்த தீர்மானங்களை வடிவமைத்தது தலைமைக் கழக நிர்வாகிகள். அதை ரத்து செய்ய இவர்கள் யார்? என்ன ஒரு சர்வாதிகாரம் இவர்களுக்கு?" என்று கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications