தக்காளி விலையை மக்களே குறைக்கலாமாம்.. எப்படி தெரியுமா? எச்.ராஜா குபீர் ஐடியாவ பாருங்க!
திருச்சி: அழுகக் கூடிய பொருட்களின் விலையை குறைக்க வேண்டும் என்றால் கன்ஸ்யூமர்களே (மக்களே) குறைக்கலாம் என்றும், விலை குறையும் போது எந்த அரசியல்வாதியாவது குரல் கொடுக்கிறார்களா? என்றும் திருச்சியில் எச் ராஜா கூறினார்.
நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தமட்டில் தக்காளி விலை ரூ.150யை கடந்து விற்பனையானது. இந்த விலை உயர்வால் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டனர். வெங்காயம் உள்பட மேலும் சில அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது.
தக்காளி விலை உயர்விற்கு நிறைய காரணங்கள் சொல்லப்படுகின்றன. போதுமான உற்பத்தி இல்லை, மழை காரணமாக தக்காளிகள் அழுகியது, மழையால் போக்குவரத்து தடை பட்டு தக்காளி விலை உயர்ந்தது, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, பணவீக்கம், போன்றவை காரணமாக சொல்லப்படுகிறது. தமிழகத்தில்

நானும் ஒரு விவசாயி: ஜூன் 12ம் தேதி கிலோ ₹20 ஆக இருந்தது. ஆனால் தற்போது வேகமாக உயர்ந்து ஒரு கிலோ ₹150 என்ற விலையில், விற்கப்பட்டு வருகிறது. நேற்று 20 ரூபாய் குறைந்து 130 ரூபாய் விற்கப்பட்ட தக்காளி இன்று 120 - 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவில்லை என்ற விமர்சனத்தையும் மக்கள் வைப்பதை காண முடிகிறது. தக்காளி விலையேற்றம் இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இந்த நிலையில், தக்காளியை வாங்காமல் இருந்தால் விலை குறைந்து விடும் என்ற குபீர் ஐடியாவை பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கொடுத்துள்ளார். இது தொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எச்.ராஜா கூறியாதாவது: - நானும் ஒரு விவசாயி.. தக்காளி விலை இப்போ கூடுகிறது. ஆனால் மூன்று மாதத்தில் தக்காளி பறி கூலிக்கு கூட காசு கொடுக்க முடியாது என கருதி விவசாயிகள் மாட்டை மேய விடுவார்கள்.
விவசாயி கஷ்டப்படும் போது: இதை தடுக்க வேண்டும் என்றால் வளர்ந்து வரும் விஞ்ஞான வளர்ச்சியை வைத்து விவசாயிகளுக்கு என்ன உதவி செய்ய வேண்டும் என்று யோசிக்க வேண்டும். இப்போ இரண்டு லட்சம் ஏக்கர்களில் தான் தக்காளி இருக்கலாம்... அதற்கு மேல் வந்து விட்டது. எனவே வரும் 3 மாதத்திற்கு தக்காளி போட வேண்டாம்.. அதற்கு பதிலாக வெங்காயம் பயிரிடுங்கள். இந்த மாதிரியான தகவல்களை விவசாயிகளுக்கு அரசு கொடுக்க வேண்டியது அவசியம்.
இல்லை என்றால் விலை ஏறுவதும் குறைவதும் நடக்கும். தற்போது வட மாநிலங்களில் வெள்ளம். அந்த மாதிரி இருக்கும் போது விலை ஏறும். 40 ரூபாய்க்கு கீழே விலை குறைந்தால் எல்லா விவசாயிகளிடமும் நாங்களே தக்காளியை வாங்குவோம் என்று அரசாங்கம் சொல்ல வேண்டும். ஏனேனில் விவசாயி கஷ்டப்படும் போது ஒருவரும் பேசுவது இல்லை. தக்காளியை எத்தனை நாட்களுக்கு வைத்து இருக்க முடியும்.

தானாக விலை குறையும்: நான் கூட கொய்யா போட்டு இருக்கேன். ஒரு நாளைக்கு மேல் வைத்து இருக்க முடியாது. மறுநாள் விற்க முடியாது. அழுகக் கூடிய பொருட்களின் விலையை குறைக்க வேண்டும் என்றால் கன்ஸ்யூமர்களே (மக்களே) குறைக்கலாம். தக்காளியை வாங்க 4, 5 நாட்கள் போகாதீங்க... தானாக விலை குறையும். அதனால் அரசியல் கட்சிகள் இதை பிரச்சினையாக்குகிறார்கள்.
ஆனால், விலை குறையும் போது எந்த அரசியல்வாதியாவது குரல் கொடுக்கிறார்களா? காரணம் என்னவென்றால் விவசாயி எண்ணிக்கை கூடவா? நுகர்வோர் எண்ணிக்கை கூடவா? என்று பார்த்துதான் இவர்கள் செய்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார். இதனிடையே, பசிக்காமல் இருக்க பத்து நாட்கள் கழிவறை போகாமல் இருக்கலாம் என்று சொல்லும் ஐடியா போல ராஜா சொல்கிறார், அரசின் தோல்வியை மக்கள் தலைமீது கட்டுகிறார், என நெட்டிசன்கள் கேலி செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications