சென்னை வந்த சேது எக்ஸ்பிரஸ் ரயிலில் பெட்டிகள் தனியாக கழன்று ஓடியது.. பீதியில் உறைந்த பயணிகள்
திருச்சி: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று இரவு புறப்பட்ட சேது எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. நள்ளிரவில் திருச்சியில் சென்றபோது கடைசி 3 பெட்டிகள் தனியே கழன்றதால் அதில் இருந்த பயணிகள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் - சென்னை இடையே சேது சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்(வண்டி 22662) இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரயில் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வரை செல்லும். இந்நிலையில் தான் நேற்று இந்த ரயில் ராமேஸ்வரத்தில் இருந்து இரவு 8.51 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டது.
ராமநாதபுரம், காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக இந்த ரயில் நள்ளிரவு 1 மணிக்கு திருச்சி சென்றது. திருச்சி ரயில் நிலையம் வந்தது. அதன்பிறகு அந்த ரயில் திருச்சியில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது. திருச்சி ரயில் நிலையத்தை கடந்த சில நிமிடங்களில் திடீரென்று ரயிலின் 3 பெட்டிகள் தானாகவே தனியே கழன்றன. இது இன்ஜின் டிரைவருக்கு தெரியவில்லை.
இதனால் இந்த 3 பெட்டிகள் தண்டவாளத்தில் அப்படியே நிற்க பிற பெட்டிகளுடன் ரயில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. இதுபற்றி அறிந்த பயணிகள் அலறினர். முன்பதிவில்லாத பெட்டிகள் என்பதால் அதில் பயணித்த 500 பயணிகளும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
ரயில்வே அதிகாரிகள் சேது எக்ஸ்பிரஸ் இன்ஜின் டிரைவருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பிறகு அந்த ரயில் நிறுத்தப்பட்டது. மேலும் தனியாக கழன்ற 3 பெட்டிகள் மீண்டும் ரயிலுடன் இணைக்கப்பட்டது. இதனால் அரைமணிநேரம் தாமதமாக இந்த ரயில் திருச்சியில் இருந்து புறப்பட்டு சென்றது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுபற்றி திருச்சி கோட்ட ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ரயிலில் இருந்து எப்படி 3 பெட்டிகள் கழன்றன? என்பது பற்றிய விசாரணையை தொடங்கினர். மேலும் ரயில் பெட்டி கழன்றதற்கான விசாரணை அறிக்கையை ரயில்வே பொறியாளர்கள் தாம்பரம் பணிமனைக்கு சமர்ப்பித்து இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications