கட்டி 9 மாதங்களே ஆன அரசு பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது.. திருச்சி அருகே பரபரப்பு!
டிதிருச்சி: திருச்சி மாவட்டம் துறையூர் அருகே அரசு தொடக்கப் பள்ளியில் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவர்கள் இல்லாத நேரத்தில் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக குழந்தைகள் காயமின்றி தப்பி உள்ளனர்.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள சிங்களாந்தபுரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 34 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இரண்டு வகுப்பறை பள்ளியாக இப்பள்ளி இயங்குகிறது. இந்தப் பள்ளிக்கு இரண்டு வகுப்பறைகள் உள்ள புதிய கட்டிடம் கட்டப்பட்டு ஒன்பது மாதங்களே ஆகிறது.

இந்நிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் இன்று காலையில் வகுப்பறை கட்டிடத்தை திறப்பதற்காக வந்து பார்த்தபோது மேற்கூரை இடிந்து விழுந்து மாணவிகள் உட்காரும் நாற்காலியில் சிமெண்ட் கட்டிகள் கொட்டிக் கிடந்தன. வகுப்பறையில் இருந்த எல்இடி டிவி மீதும் மேற்கூரை இடிந்து விழுந்த சிமெண்ட் பூச்சு விழுந்து கிடந்தது. வெள்ளிக்கிழமை பள்ளி முடிந்து தலைமையாசிரியர் பூட்டிச் சென்ற நிலையில் சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து இன்று காலை பள்ளியை திறக்கும் போது தான், மேற்கூரை இடிந்து விழுந்தது தெரியவந்தது.
பள்ளி வகுப்பறையில் குழந்தைகள் இருக்கும் பொழுது இச்சம்பவம் நடந்திருந்தால் குழந்தைகள் காயமடைந்து இருப்பார்கள். நல்வாய்ப்பாக விடுமுறை தினத்தில் இந்த அசம்பாவிதம் நடந்ததால் குழந்தைகள் காயமின்றி உயிர் தப்பினர். இந்தப் பள்ளி கட்டிடம் திறக்கப்பட்டு 9 மாதங்களே ஆன நிலையில் பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிதாக கட்டி திறக்கப்பட்ட வகுப்பறைக் கட்டிடத்தின் மேற்கூரை, வெறும் 9 மாதங்களிலேயே சேதமடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குழந்தைகள் உயிருடன் விளையாடாமல், பள்ளி கட்டிட தரத்தில் சமரசம் செய்துகொள்ளாமல் தரமானதாக கட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications