தவெகவுக்கு நோ.. 2026ல் சோலோ பர்ஃபாமென்ஸ் தான்! திமுக-பாஜக நேரடி கூட்டணி.. நாம் தமிழர் சீமான் பளீர்
திருச்சி: தவெக - அதிமுக கூட்டணி குறித்து எல்லாம் என்னிடம் கேட்க கூடாது, நாங்கள் 2026 சட்டமன்ற தேர்தலில் தனித்து தான் போட்டியிடுவோம் எனவும், திமுகவும் பாஜகவும் கள்ள உறவில் அல்ல, நல்ல உறவில் நேரடியான கூட்டணியிலேயே உள்ளார்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 88 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரின் உருவ சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்," வ.உ.சி கப்பலோட்டிய தமிழர், செக்கிழுத்தும் நாட்டின் விடுதலைக்கு பாடுபட்டார். தமிழகத்தை சேர்ந்த விடுதலை போராட்ட வீரர்கள் மறக்கப்பட்டு மறைக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களின் எந்த அடையாளமும் தமிழகத்தில் இல்லை.
திராவிடம் என்பது தமிழர்களின் அடையாளங்களை மறக்கடிக்க உருவாக்கப்பட்டது தான். தமிழர்களின் அடையாளங்களை திராவிட அடையாளங்களாக மாற்றியுள்ளார்கள். வல்லபாய் பட்டேலை தூக்கி பிடித்தவர்கள் ஆர்.என்.ரவியின் கூட்டத்தினர், அதை ஆதரித்தவர்கள் திராவிட கூட்டத்தினர். ஆட்சியாளர் தன் ஆட்சி சிறப்பாக இருக்கிறது என கூறினால் அந்த ஆட்சி கொடுமையாக இருக்கிறது என்று தான் அர்த்தம். தமிழக முதல்வர் தான் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் திராவிட மாடல் ஆட்சி சூப்பர் என்று சொல்வதாக கூறிவருகிறார். என்னுடன் ஒருமுறை வாருங்கள். நானும் ஆய்வுக்குப் போகிறேன். இந்த மனுக்களைக் கொடுத்துவிட்டு, கவலை, கண்ணீரோடு மக்கள் கதறுவதை ஒருமுறை கேளுங்கள்.
ஆய்வுக்கு செல்லும் பொழுது மக்கள் வரவேற்கிறார்கள் என்றால் அவர்களாகவே வரவேற்க வந்தார்களா அல்லது வர வைக்கப்பட்டார்களா? காசு கொடுத்து மக்களை அழைத்துவந்து சாலையின் இருபுறங்களிலும் மக்களை நிறுத்திவைக்கின்றனர். மக்கள் அவர்களாக வருவதில்லை. இந்த தலைவனின் ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்று மக்கள் முதல்வரை பார்க்க வருவதில்லை.
தவெக - அதிமுக கூட்டணி குறித்தெல்லாம் என்னிடம் கேட்க கூடாது. நாங்கள் 2026 சட்டமன்ற தேர்தலில் தனித்து தான் போட்டியிடுவோம். நாம் தமிழர் கட்சி வரும் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. அதற்கான வேலைகள் நடக்கிறது. 2026-ல் நாங்கள் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம். அதில் 117 பெண்கள், 117 ஆண்களுக்கு வாய்ப்புக் கொடுப்போம். நூறு இளைஞர்கள், இளம்பெண்களுக்கு வாய்ப்புக் கொடுக்க இருக்கிறோம் கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம் என்கிற கொள்கையுடையவன் நான்.
மற்ற எல்லோருக்கும் ரெய்டு வருகிறார்கள். ஆளும்கட்சியான தி.மு.க வினரிடம் எந்த ரெய்டும் ஏன் வரவில்லை, அவர்களுக்கு வராது அதற்கு காரணம் அவர்கள் கரைப்படியாது கரம் என்பதல்ல. கப்பம் சரியாக கட்டி கொண்டுள்ளார்கள் என்று அர்த்தம். பா.ஜ.க ஆளும் மாநில முதல்வர்களையோ அமைச்சர்களையோ சந்திக்க நேரம் ஒதுக்காத மோடி, தமிழக முதலமைச்சரையும், அவரது மகனான தமிழக விளையாட்டு துறை அமைச்சரையும் சந்திக்க நேரம் ஒதுக்குகிறார். காலையில் அப்பா சந்தித்தால் மாலையில் மகன் சந்திக்கிறார். திமுகவும் பா.ஜ.கவும் கள்ள உறவில் அல்ல, நல்ல உறவில் நேரடி கூட்டணியில் தான் இருக்கிறார்கள்." என்றார்.












Click it and Unblock the Notifications