"1000 அமித் ஷாக்கள் வந்தாலும் தமிழ்நாடு அரசியலில் எவ்வித மாற்றமும் இருக்காது" - சீமான் தாக்கு!
திருச்சி: தமிழ்நாட்டுக்கு ஆயிரம் அமித் ஷாக்கள் வந்தாலும் அரசியலில் எந்த மாற்றமும் வராது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டை யார் அதிகம் நாசம் செய்வது என்பதில் திமுக - அதிமுக இடையே போட்டி நிலவுகிறது என்றும் சீமான் தெரிவித்தார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "திராவிடம் தமிழ்த் தேசியத்துக்கு எதிரானது எனக் கற்பித்த திருமாவளவன், இப்போது இரண்டும் ஒன்று என்கிறார். அவர் தனது தேவைக்கேற்ப கருத்துக்களை மாற்றிக்கொள்கிறார். திராவிடம் என்பது தமிழ் தேசியத்திற்கு எதிரானது என்பதை அவரே ஒரு காலத்தில் கற்பித்தார்.

தமிழ்நாட்டில் எல்லா இடங்களிலும் இந்தி இருக்கிறது. ஆனால், இங்கு நடக்கும் இந்தி எதிர்ப்பு என்பது வெறும் நாடகம் மட்டுமே. இந்திக்கு எதிராகப் போராடிய மாணவர்களை சுடச் சொன்னவர் பெரியார். இன்று தமிழர்களுக்குத் தங்கள் மொழி, வரலாறு, அரசியல் என எதுவுமே தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பொங்கலுக்கு இலவச பரிசுப் பொருள்கள் தருவது கேவலமானது. இதில் பெருமைப்பட ஒன்றுமில்லை. அனைத்துத் தரப்பினரும் தமிழகத்தில் போராடிவரும் நிலையில், நல்ல ஆட்சியைத் தருவதாக திமுக கூறி வருகிறது. வீதிக்கு வீதி மதுக்கடைகளைத் திறந்து வைத்துவிட்டு போதைப் பொருள்களைத் தடுப்போம் என முதல்வர் கூறுவது வேடிக்கையானது.
போதைப்பொருள் தடுப்பைப் பற்றி பேச தமிழக அரசுக்கு தகுதி இருக்கிறதா? காவல் துறையின் ஆதரவின்றி போதைப் பொருள்களை தமிழகத்தில் விற்க முடியாது. மக்களின் கோரிக்கைகளைக் கேட்டு தேர்தல் அறிக்கையை நிறைவேற்றுவோம் எனக் கூறுவது மக்களுக்கு என்ன பிரச்சனை எனத் தெரியாமலேயே ஆட்சி செய்கிறீர்களா என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது.
15 ஆண்டுகளாகப் போராடும் ஆசிரியர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்றவில்லை. அவர்களைக் கைது செய்வது கண்டிக்கத்தக்கது. அரசு மதுக்கடைக்குத் தரும் முக்கியத்துவத்தை ஆசிரியர்களுக்குத் தருவதில்லை. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு மற்றும் கொடநாடு கொலை வழக்கு போன்ற முக்கியப் பிரச்சனைகளில் இதுவரை எந்த உருப்படியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கூட்டணி மாறுவதால் ஆட்சி மாறும். ஆனால், ஆட்சி முறை மாறாது. திமுக - அதிமுக இரு கட்சிகளுமே கூட்டு சேர்ந்து ஒருவரையொருவர் குறை கூறி வருகின்றனர். நாங்கள்தான் மாற்றத்துக்கான சக்தி. தமிழ்நாட்டுக்கு ஆயிரம் அமித்ஷாக்கள் வந்தாலும் எந்த மாற்றமும் வராது.
"தமிழ்நாட்டை அழிப்பதில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையே தான் பலத்த போட்டி நடக்கிறது. ஊழல் கட்சிகளுக்கு மாற்றாக எங்களைப் போன்ற தூய எண்ணம் கொண்டவர்களால் மட்டுமே மாற்றத்தைக் கொண்டுவர முடியும். தீயசக்திக்கு மாற்று எங்களைப் போன்ற தூய ஆற்றல்கள் தான். ஆகையால் தமிழ்நாட்டில் மாற்று என்பது நாங்கள் தான்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications