ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி.. சொர்க்கவாசல் திறப்பு.. பக்தர்களுக்கு தெற்கு ரயில்வே சொன்ன குட் நியூஸ்
திருச்சி: வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் 3 நாட்களுக்கு சில நிமிடங்கள் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
108 வைணவ திவ்ய தேசங்களில் முதல் திவ்ய தேசமாகவும், பூலோக வைகுண்டம் என்றும் போற்றப்படுவது திருச்சி - ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். இந்த கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும் மார்கழி மாதத்தில் 20 நாட்கள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பு வாய்ந்தது.
பொதுவாக பெருமாள் கோவில்கள் அனைத்திலும் வைகுண்ட ஏகாதசி நாளன்று அதிகாலையில் சொர்க்க வாசல் எனப்படும் பரமபத வாசல் திறக்கப்பட்டு, அதன் வழியாக பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்வு நடக்கும். ஆனால் ஸ்ரீரங்கத்தில் இவ்விழா 20 நாள் விழாவாக நடத்தப்படும். வைகுண்ட ஏகாதசிக்கு முன்புள்ள 10 நாட்கள் பகல் பத்து என்றும், வைகுண்ட ஏகாதசிக்கு பிறகு வரும் 10 நாட்கள் இராபத்து என்றும் அழைப்படுகிறது.
உயிருக்கு ஆபத்தான நோய்களை நீக்கும் வருத்தினி ஏகாதசி விரதம் - பலன் பெற்றவர்கள் யார் தெரியுமா
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி
திருச்சி, பூலோக வைகுண்டமாக போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா வருகிற 22ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது. டிசம்பர் 23ஆம் தேதி பகல் பத்து உற்வசம் தொடங்குகிறது. ஜனவரி 1ஆம் தேதி மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளுகிறார்.
சொர்க்கவாசல் திறப்பு
ஜனவரி 2ஆம் தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுகிறது. இதனையொட்டி
அதிகாலை 3.45 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பாடு நடக்கும். வழக்கமான பூஜைகளுக்கு பிறகு காலை 4.45 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டு, நம்பெருமாள் திருக்காட்சி தர உள்ளதாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் பகல்பத்து உற்சவம் நடைபெறுகிறது. ஜனவரி 8ஆம் தேதி திருக்கைத்தல சேவையும், 9ஆம் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், 11ஆம் தேதி தீர்த்தவாரியும், 12ஆம் தேதி நம்மாழ்வார் மோட்சமும் நடைபெறுகிறது.
பந்தல் அமைக்கும் பணி
இந்த விழாவையொட்டி ரங்கநாதர் கோவிலில் ஆயிரங்கால் மண்டபம் அருகே முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதற்கான பந்தல் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள். ஆயிரங்கால் மண்டபம் அருகே கூடுதல் பந்தல் கால்கள் ஊன்றி திருக்கொட்டகை அமைக்கும் பணி துவங்கியது. இந்தநிலையில், ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
நின்று செல்லும் ரயில்கள்
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட முதுநிலை வணிக மேலாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வருகிற ஜனவரி 2ஆம் தேதி நடைபெறவுள்ள சொர்க்கவாசல் திறப்பு நாளன்று பக்தர்களின் வசதிக்காக வண்டி எண்: 12635 சென்னை எழும்பூர்-மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ரயில் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் மாலை 6.08 மணி முதல் 6.10 மணி வரை நின்று செல்லும். வண்டி எண்: 12636 மதுரை-சென்னை எழும்பூர் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் காலை 9.38 மணி முதல் 9.40 மணி வரை நின்று செல்லும்.
கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில்கள்
இதேபோல் வண்டி எண்: 16102 கொல்லம்-சென்னை எழும்பூர் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 9.38 மணி முதல் 9.40 மணி வரையிலும், வண்டி எண்: 16101 சென்னை எழும்பூர்-கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 9.18 மணி முதல் 9.20 மணவி வரையிலும் நின்று செல்லும். இந்த ரயில்கள் 1ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை 3 நாட்கள் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட முதுநிலை வணிக மேலாளர் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டிற்கு அடுத்த நாளே இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி வருவதாலும், கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு நடக்கும் விழா என்பதாலும் இந்த ஆண்டு லட்சக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.