"நிறையவே அவமானப்பட்டு உள்ளோம்.." அழுத்தமாக சொன்ன அமைச்சர் கே.என்.நேரு! கவனித்து கேட்ட பொதுமக்கள்
திருச்சி: திருச்சியில் நடைபெறும் புத்தகத் திருவிழாவைத் தொடங்கி வைத்த அமைச்சர் கே.என்.நேரு அந்த நிகழ்வில் நெகிழ்ச்சியாகப் பேசினார்.
தமிழ்நாட்டில் பல இடங்களில் புத்தகத் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. அதன்படி திருச்சியில் செப். 16ஆம் தேதி முதல் வரும் 26ஆம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெறுகிறது.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் நடைபெறும் இந்த புத்தகத் திருவிழாவின் 100க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

புத்தகக் கண்காட்சி
புத்தகக் கண்காட்சியில் முதல் நாளான நேற்று நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் K.N. நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிறுபான்மை நலத்துறை மற்றும் வெளிநாடு வால் தமிழர்கள் நலத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு, புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தனர். இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் நேரு சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

அமைச்சர் நேரு
அமைச்சர் நேரு பேசுகையில், "அண்ணாவை யாராலும் பேச்சில் வெல்லவே முடியாது. அந்தளவு சிறப்பாகப் பேசுபவர் அண்ணா. இப்போதும் கூட அவர் இருந்ததால் அவரை சொற்பொழிவில் யாராலும் வெல்ல முடியாது. "தலைப்பு இல்லை" என்ற தலைப்பிலேயே 3 மணி நேரம் பேசியவர் அவர். நாடாளுமன்றத்தில் முதலில் உரையாற்றும் போது, அவருக்கு வெறும் 5 நிமிடங்கள் தான் கொடுத்தனர்.

அண்ணா
"நான் தெற்கில் இருந்து வந்திருக்கிறேன். எங்கள் நாடு இப்படியிருக்கிறது" எனத் தனது முதல் உரையிலேயே பேசியவர் பேரறிஞர் அண்ணா. இருப்பினும், அவரது பேச்சைக் கேட்டு பிரதமர் நேருவே கூடுதலாகப் பேச அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டார். இதனால் வெறும் 5 நிமிடம் அனுமதி அளித்த போதிலும், முதல் பேச்சிலேயே அவர் சுமார் 1.45 மணி நேரம் பேசியவர் அண்ணா.

கருணாநிதி
கருணாநிதி நிறையப் படிக்கும் பழக்கம் கொண்டவர். பெரியார் பற்றிய ஒரு நூலுக்கு அணிந்துரை அளிக்க வேண்டும் என்ற போது, வெறும் 2.30 மணி நேரத்தில் அந்த முழு புத்தகத்தையும் வாசித்து அணிந்துரை அளித்தவர். அதிலும் தவறு இருந்த இடத்தையும் சுட்டிக்காட்டினார். அந்தளவுக்கு ஆற்றல் நிறைந்தவர் கருணாநிதி. மாணவர்கள் அதிகமாகப் படிக்க வேண்டும்.

அவமானப்பட்டு இருக்கிறோம்
நாங்கள் எல்லாம் நிறையவே அவமானப்பட்டு உள்ளோம். நிறைய மீட்டிங்களுக்கு செல்வோம். அங்கெல்லாம் ஆங்கிலத்தில் பேசுவார்கள். அவர்கள் பேசுவது புரியும் என்றாலும் எங்களால் பதில் கூற முடியாமல் போகும். இதனால் தான் சொல்கிறேன் மாணவர்கள் நன்றாகப் படிக்க வேண்டும். அறிவார்ந்தவர்களாக வந்து ஊருக்கே நீங்கள் பெருமை சேர்க்க வேண்டும்.

10 பைசாவிற்க்கு பிரோயஜனம் இல்லை
கருணாநிதி முதல்வராக இருந்த சமயத்தில் அவரிடம் திருச்சிக்கு மத்திய பல்கலைக்கழகம் வேண்டும் என்று கேட்டேன். அவரும் அமைத்துக் கொடுத்தார். திருச்சிக்கு ஒன்று, திருவாரூருக்கு ஒன்று, கோவைக்கு ஒன்று கொடுத்தார். ஆனால், அந்த மத்திய பல்கலைக்கழகங்களால் 10 பைசாவிற்கு பிரோயஜனம் இல்லை. நமது ஊரைச் சேர்ந்தவர்களால் அங்குப் படிக்கவும் முடியவில்லை.. வேலையும் செய்ய முடியவில்லை

மத்திய பல்கலைக்கழகங்கள்
எனவே மத்திய பல்கலைக்கழகம் எல்லாம் நமக்குத் தேவையில்லை. நமது மாநில பல்கலைக்கழகங்களிலேயே கற்றுத் தெரிந்தாலே சிறப்பாகப் படிக்கலாம். ஆன்மீகம், சரித்திரம் போன்றவற்றை உள்ளடக்கி திருச்சியைப் பற்றி நந்தலாலா சிறப்பாக எழுதியுள்ளார். திருச்சி மாநகராட்சி, சென்னை மாநகராட்சி போல விரிவு படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் முக்கிய நகரமாகத் திருச்சியை மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications