"காந்தியை போல.." ராகுலும் தலைவராகாமலேயே காங்கிரஸை வழிநடத்துவார்.. சொல்கிறார் கே.எஸ்.அழகிரி
திருச்சி: ராகுல் காந்தி இந்தியா முழுக்க ஒற்றுமை நடைப்பயணம் செய்ய உள்ள நிலையில், ராகுல் காந்தி குறித்து கே.எஸ்.அழகிரி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ராகுல் காந்தி வரும் செப்டம்பர் 7 தொடங்கி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ஒற்றுமை நடைப்பயணம் செய்ய உள்ளார்.
இதற்குத் தேவையான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்து, நிதி திரட்டவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

கே.எஸ். அழகிரி
இது தொடர்பாக இன்று திருச்சி ஹெல்பிஎஸ் மஹாலில் திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, திருச்சி எம்பி திருநாவுக்கரசர், மூத்த தலைவர்கள் தங்கபாலு, ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். இதில் ராகுல் காந்தி பயணம் குறித்து பல்வேறு விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டது.

வாக்குறுதி
ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, "இனம், மொழி, ஜாதி என்று பிரித்துப் பார்க்காமல் மக்களின் நல்லிணக்கத்தை வலியுறுத்தி மட்டுமே ராகுல் காந்தியின் இந்த நடைப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது. கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக பாஜக சொன்னது. அந்த வாக்குறுதி என்னாச்சு?

பொருளாதார கொள்கை
மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. டெல்லியில் இருந்து கொண்டு பொதுமக்கள் எதைச் சாப்பிட வேண்டும், எதைச் சாப்பிடக் கூடாது என்று மத்திய அரசு பட்டியல் போடுகிறது. இதெல்லாம் நாட்டில் பதற்றத்தை அதிகரிக்கவே செய்கிறது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது, அரிசி 2 ரூபாய்க்கும், கோதுமை 1 ரூபாய்க்கும் கொடுத்தோம். ஆனால் பாஜக ஆட்சியில் அதே அரிசி, கோதுமைக்கு 5% ஜிஎஸ்டி வரி வசூல் விதிக்கிறது.

ஜிஎஸ்டி
இப்போது ரயில்வே கட்டணத்திலும் கூட ஜிஎஸ்டி வந்துள்ளது. 180 கி.மீ வேகத்தில் செல்லும் வந்தே பாரத் ரயில் உட்பட தமிழ்நாட்டிற்கு என்று எந்த பிரத்தியேக ரயில்களும் இல்லை. 2047இல் இந்திய வல்லரசாகிவிடும் என்கிறார் பிரதமர் மோடி. அப்போது பொருளாதாரம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், இப்போது நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாக உள்ளது. இப்போது கஷ்டப்படும் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதே மத்திய அரசின் கடமை" என்றார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்?
ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சிக்கு ஏற்ற தலைவர் இல்லை என்ற குலாம் நபி ஆசாத் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்குப் பதில் அளித்த அவர், "கட்சியில் இருந்து வெளியேறும் அனைவரும் விஷத்தைக் கக்கிவிட்டுத் தான் செல்வார்கள். இதுவும் அதே தான்! ராகுல் காந்தி கட்சியின் தலைவராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பாஜகவில் மோடி ஒன்றும் அக்கட்சியின் தலைவர் இல்லையே.

காந்தி
அதேபோல் நாடு சுதந்திரம் அடையும் சமயத்தில் காந்தி கூட காங்கிரஸ் கட்சிக்குத் தலைவராக இருந்தது இல்லை. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு அவர் உறுதுணையாக இருந்து வழிநடத்தினார். எனவே, ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியில் தலைவராக வருவாரா, மாட்டாரா என்ற விவாதமே தேவையில்லை" என்றார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு
தொடர்ந்து பேசிய அவர், "தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில், துப்பாக்கிச் சூடு நடத்திய காவலர்கள் மீது எப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறதோ.. அதேபோல துப்பாக்கிச் சூடு உத்தரவிட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தினத்தந்தி பத்திரிகையில் வரும் சிந்துபாத் கதையைப் போலக் கர்நாடக பள்ளி பாடத்திட்டத்தில் சாவர்க்கர் புல் புல் பறவையில் அமர்ந்து பறந்து சென்றதாக எழுதி இருக்கிறார்கள்.

பயிர்க் காப்பீடு திட்டம்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கான பயிர்க் காப்பீடு திட்டம் என்பது படு தோல்வி! இந்த திட்டம் அனைத்து விவசாயிகளுக்கும் பயன் அளிப்பதாக இல்லை. குறிப்பிட்ட சில மாநிலங்களுக்கு மட்டுமே இந்த பலன் செல்கிறது. அங்கும் கூட பணக்கார விவசாயிகளுக்கு மட்டுமே இது உதவுகிறது. ஏழை விவசாயிகள் இந்த காப்பீடு திட்டம் சென்றடையவில்லை. பரந்தூரில் விமான நிலையத்தைப் பொறுத்தவரை நிலம் கையகப்படுத்தப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு தமிழக அரசு வழங்க வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications