ஒரு தற்கொலை முயற்சி.. மொத்தமாக குவிந்த பகீர் புகார்கள்.. அதிமுகவின் "மாஜிக்கு" குறி வைக்கும் போலீஸ்?
திருச்சி: அதிமுக பெரம்பலூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ பூவை செழியனுக்கு எதிரான புகார்களை போலீசார் தீவிரமாக விசாரிக்க தொடங்கி உள்ளனர்.
நடிகை சாந்தினி அளித்த புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டுள்ளார். இன்னொரு பக்கம் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலர் மீதான ஊழல் புகார்கள், முறைகேடு புகார்கள் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில்தான் அதிமுக மாஜி எம்எல்ஏ பூவை செழியனுக்கு எதிரான முக்கிய புகார்களை போலீசார் விசாரிக்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

புகார்
திருச்சியில் பல்வேறு நபர்களுக்கு வேலை வாங்கி கொடுப்பதாக ஏமாற்றியதாக இவர் மீது புகார் வைக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி, ஏமாற்றியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஒரு அரசு வேலைக்கு 8 லட்சம் ரூபாய் என்று வசூலித்து, பின் வேலையும் வாங்கி கொடுக்காமல் ஏமாற்றியதாக இவர் மீது புகார் வைக்கப்பட்டுள்ளது.

முதல் புகார்
மணப்பாறையை சேர்ந்த சின்னச்சாமி என்பவர் கொடுத்த புகாருக்கு பின்புதான் இந்த முறைகேடு வெளியே தெரிந்தது. கூட்டுறவுத்துறையில் இவருக்கு வேலை வாங்கி தருவதாக, 8 லட்சம் ரூபாயை அதிமுக முன்னாள் எம்எல்ஏ பூவை செழியன் வாங்கிக்கொண்டதாக புகார் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் பணத்தை வாங்கிக்கொண்ட பின்பும் செழியன் வேலை வாங்கி தரவில்லை என்று சின்னசாமி கூறி உள்ளார்.

தீ குளிப்பு
வேலை வாங்கி கொடுக்காமல் ஏமாற்றிய செழியன், சின்னசாமி கொடுத்த பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லையாம். பணத்தை திருப்பி கேட்டதற்கு செழியன் மோசமாக திட்டி, மிரட்டல் விடுத்ததாக சின்னசாமி புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து சென்னையில் கூட்டுறவுத்துறை அலுவலகம் முன் சின்னசாமி தீ குளிக்க முயற்சி செய்தார். எனக்கு நியாயம் வேண்டும் என்று கூறி சின்னசாமி தீ குளிக்க முயற்சி செய்தார்.

புகார்
இந்த சம்பவம் ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையானது. இதையடுத்து உடனே தமிழ்நாடு அரசு இது தொடர்பாக விசாரிக்க உத்தரவிட்டது, சென்னை போலீஸ் உயர் அதிகாரிகள், கமிஷ்னர் அலுவலக அதிகாரிகள் இது தொடர்பாக மணப்பாறை காவல் நிலையத்திற்கு உத்தரவு பிறப்பித்த நிலையில், உடனடியாக செழியன் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கொலை மிரட்டல் ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

மேலும்
தொடக்கத்தில் இவர் மீது வழக்கு பதியப்படாமல் இருந்த நிலையில், சீனியர் அதிகாரிகள் கிரீன் சிக்னல் கொடுத்த நிலையில் வழக்கு பதியப்பட்டது. போலீசார் செழியன் மீது வழக்கு பதிந்த நிலையில், அடுத்தடுத்து இன்னும் சிலர் இதேபோல் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து செழியனுக்கு எதிரான விசாரணையை போலீசார் முடுக்கிவிட்டுள்ளனர்.

பல்வேறு புகார்கள்
இவற்றுக்கு எதிரான மற்றது குறித்தும் விசாரணை நடத்தி, அதிலும் வழக்கு பதியும் முனைப்பில் அரசு உள்ளது. இவர் பல லட்சம் ரூபாயை முறைகேடு செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் முன்னாள் எம்எல்ஏ செழியனை கைது செய்யும் முனைப்பில் போலீசார் இருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications