திருச்சியில் அடுத்த ஷாக்.. பல்கலை பேராசிரியையை கட்டையால் தாக்கி தரதரவென இழுத்து சென்ற கொள்ளையன்!
திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக பணியாற்றி வரும் சீதாலட்சுமி தனியாக நடைப்பயிற்சி சென்றபோது உருட்டு கட்டையால் தாக்கப்பட்டார்.
திருச்சி: திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் இசிஇ துறை தலைவரான 53 வயது நிரம்பிய பேராசிரியை தனியாக நடைப்பயிற்சி சென்ற நிலையில் உருட்டு கட்டையால் கொள்ளையன் அவரை தாக்கி தரதரவென இழுத்து சென்று ஸ்கூட்டர், செல்போனை கொள்ளையடித்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. மேலும் இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தின் பின்புறத்தில் வஉசி சாலை பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி சீதாலட்சுமி (வயது 53). இவர் திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசியராகவும், இசிஇ துறையின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.
இவர் நடைப்பயிற்சி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த 12ம் தேதி மாலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள சாலையில் இருக்கும் தனியார் பள்ளி மைதானத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தார்.

உருட்டு கட்டையால் தாக்கி கொள்ளை
அப்போது மைதானத்தில் அவர் மட்டும் தனியாக நடைப்பயிற்சி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதை பார்த்த மர்மநபர் திடீரென்று உருட்டு கட்டையை எடுத்து அவரது தலையில் தாக்கியுள்ளார். இதில் மயங்கிய சீதாலட்சுமி அப்படியே சரிந்து விழுந்தார். இதையடுத்து சீதாலட்சுமியை அந்த நபர் தரதரவென இழுத்து சென்றார். அதன்பிறகு அவரது ஸ்கூட்டர் மற்றும் செல்போன் கொள்ளையடிக்கப்பட்டது.

தப்பிய கொள்ளையன் கைது
இந்நிலையில் தான் சம்பவம் குறித்து கண்டோன்மென்ட் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று சீதாலட்சுமியை மீட்டனர். மேலும் கொள்ளையனை பிடிக்க முயன்றனர். ஸ்கூட்டரில் தப்பிய கொள்ளையன் திடீரென்று தடுப்பு கட்டையில் மோதி தவறி கீழே விழுந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

யார் இந்த கொள்ளையன்?
விசாரணையில் அவர் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பழமார்நேரியை சேர்ந்த செந்தில்குமார் ( 32) என்பதும், அவர் கீழக்கடை பஜாரில் தங்கியிருப்பதும் தெரியவந்தது. மேலும் கஞ்சா மற்றும் மதுபானம் குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையான இவர் பணத்துக்கு ஆசைப்பட்டு பேராசிரியை சீதாலட்சுமியை தாக்கி செல்போன், இருசக்கர வாகனத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது.

வெளியான வீடியோ
இதையடுத்து அவரிடம் இருந்த ஸ்கூட்டர் மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் செந்தில்குமார் கீழே விழுந்ததால் அவர் காயமடைந்துள்ள நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் செந்தில்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக கொள்ளையன் செந்தில் குமார், பேராசிரியை சீதாலட்சுமியை தாக்கி தரதரவென இழுத்து சென்றதை ஒருவர் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications