இந்த மேடையிலேயே இந்தியா கூட்டணிக்கு ஒரு வேண்டுகோள்.. திருமாவளவன் பேச்சுக்கு எழுந்த கரகோஷம்!
திருச்சி: இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்ததும் ஆளுநர் பதவி ஒழிக்கப்படும் என்ற வாக்குறுதியை தேர்தல் வாக்குறுதியாக வழங்கவேண்டும் என இந்தியா கூட்டணிக்கு மேடையிலேயே வேண்டுகோள் விடுத்தார் விசிக தலைவர் திருமாவளவன்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் 'வெல்லும் ஜனநாயகம்' எனும் தலைப்பிலான மாநாடு இன்று திருச்சி சிறுகனூர் பகுதியில் நடைபெற்று வருகிறது. விசிக தலைவரும், எம்.பியுமான திருமாவளவன் தலைமையில் நடைபெற்று வரும் இந்த மாநாட்டில், முதலமைச்சர் ஸ்டாலின், இந்தியா கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த மாநாட்டில் விசிக தலைவர் திருமாவளவன் தீர்மானங்களை வாசித்தார். ஆளுநர் பதவியை ஒழித்திடுவோம். இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்ததும் ஆளுநர் பதவி ஒழிக்கப்படும் என்ற வாக்குறுதியை தேர்தல் வாக்குறுதியாக வழங்கவேண்டும் என இந்தியா கூட்டணியை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது என தீர்மானம் வாசித்தார் திருமாவளவன்.
திருமாவளவன் பேசுகையில், “ஆளுநர் பதவி என்பது பிரிடிஷ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டு சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்துக்குள் தங்கிவிட்ட ஒன்றாகும். மத்திய அரசால் ஆளுநர் நியமிக்கப்படுவதாகச் சொல்லப்பட்டாலும் மத்திய அரசை ஆட்சி செய்யும் கட்சியாலேயே அவர் நியமிக்கப்படுகிறார். நடுநிலைக்கும் அவருக்கும் எந்தவொரு தொடர்பும் இருப்பதில்லை. தன்னை நியமிக்கும் கட்சியின் முகவராகவே அவர் செயல்படுகிறார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுக்குத் தொல்லை தருவதற்கும், தமக்குப் பிடிக்காத கட்சிகளை உடைப்பதற்கும். மாநிலத்தில் நிலையற்ற தன்மையை உருவாக்குவதற்கும் ஒன்றிய அரசால் ஆளுநர் பயன்படுத்தப்படுகிறார். மாநில அரசுகளைக் கலைப்பதற்கு ஆளுநரைத்தான் மத்திய அரசு பயன்படுத்துகிறது. மாநில அரசுகள் இயற்றுகிற சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முடக்குகிற வேலையில் ஆளுநர்கள் ஈடுபடுவதைப் பார்க்கிறோம்.
மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையில் ஆளுநர் என்ற பதவி எந்தவிதத்திலும் தேவையாக இல்லை. எனவே ஆளுநர் பதவியை ஒழிக்கவேண்டும் என்ற கோரிக்கையைத் தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநில அரசுகளும் தொடர்ந்து முன்வைத்துவருகின்றன. இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்ததும் ஆளுநர் பதவி ஒழிக்கப்படும் என்ற வாக்குறுதியை தேர்தல் வாக்குறுதியாக வழங்கவேண்டும் என 'இந்தியா’ கூட்டணியை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது. நம் கூட்டணிக்கே நாம் ஒரு வேண்டுகோள் வைக்கிறோம்.” எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications