சென்னை, கோவை, மதுரைக்கு முக்கியத்துவம்.. திருச்சி மெட்ரோ ரயில் நிலை என்ன தெரியுமா?
திருச்சி: திருச்சி மாநகரில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்துவது குறித்து சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம், கடந்த ஓராண்டுக்கு முன்பே விரிவான சாத்தியக்கூறு அறிக்கையை சமர்பித்த போதிலும், விரிவான திட்ட அறிக்கையை தொடங்கவில்லை.. இந்த திட்டத்திற்கு தமிழக அரசு முன்னுரிமை அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஏனெனில் நிதியை ஏற்பாடு செய்வது சவாலானது என்கிறார்கள்.. அதேநேரம் கோவை மற்றும் மதுரை திட்டங்கள் மத்திய அரசு ஒப்புதல் அளித்தால் செயல்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.
தமிழ்நாட்டில் தற்போது சென்னையில் மட்டுமே மெட்ரோ ரயில் ஓடுகிறது. இங்கு முதற்கட்டமாக விமான நிலையம் முதல் விம்கோ நகர், கோயம்பேடு பரங்கிமலை என இருவழித்தடங்களில் மெட்ரோ ரயில் ஓடுகிறது. இருவழித்தடங்களும் சென்னையின் மையப்பகுதியை முழுமையாக இணைக்கிறது. அடுத்ததாக மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலும், பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரையிலும், மாதவரம் பால் பண்ணை முதல் சோழிங்கநல்லூர் வரையிலும் என மேலும்3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் ஓடப்போகிறது. பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்த பணிகள் முடிந்தால் கிட்டத்தட்ட மொத்த சென்னையிலும் எங்கு வேண்டுமானாலும் மெட்ரோ ரயிலில் பயணிக்க முடியும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில பாதை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகளும் விரைவில் தொடங்கும் என தெரிகிறது.

அதேநேரம் சென்னையை தாண்டி என்று பார்த்தால் கோவையில் மெட்ரோ ரயிலுக்கான ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் மதுரையிலும் மெட்ரோ ரயில் பாதைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. கோவை, மதுரையில் ஒரே நேரத்தில் மெட்ரோ ரயில் பணிகள் தொடங்குமா அல்லது முதலில் கோவையில் தொடங்குமா என்று தெரியவில்லை. ஏனெனில் நிதி ஒதுக்கீடு மிக முக்கியம் ஆகும். இதற்கான நிதி ஒதுக்கீடு கிடைத்த உடன் பணிகள் தொடங்கப்படும். தற்போதைய நிலையில் கோவை மாநகர பகுதியில் 34.8 கிலோ மீட்டர் தொலைவில் 2 வழித்தடங்களுடன் 32 ரயில் நிலையங்களுடன் மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. சிஎம்ஆர்எல் மூலம் விரிவான திட்ட அறிக்கையை மாநில அரசு மூலம் மத்திய அரசுக்கு சமர்ப்பித்துள்ளது. மத்திய அரசு இத்திட்டத்திற்கான ஒப்புதலை விரைவில் வழங்கும் என தெரிகிறது. இதேபோல் மதுரைக்கும் சமர்பிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் கோவையில் ரூ.10,740 கோடியிலும், மதுரைக்கு ரூ.11,340 கோடியிலும் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் 3 ஆண்டுகளில் செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தை முறையாகச் செயல்படுத்துவதற்காக நில ஆர்ஜித பணிகள், சாலைகளில் மழைநீர் வடிகால், மின் கேபிள் ஆகியவைகளை முறையாக மாற்றிடும் வகையில் ஒன்றரை ஆண்டு முதல் 2 ஆண்டுகள் பணிகள் வரை நடைபெற உள்ளது. ஆனால் கோவை, மதுரையை போல் திருச்சியிலும் மெட்ரோ ரயில் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் திருச்சிக்கு முன்னுரிமை கிடைக்க வாய்ப்பு இல்லை என்கிறார்கள்.
ஏனெனில் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம் ஒரு வருடத்திற்கு முன்பு விரிவான சாத்தியக்கூறு அறிக்கையை முடித்துவிட்ட போதிலும், திருச்சி மெட்ரோ திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை உருவாக்கும் பணியை இன்னும் தொடங்கவில்லை. 2023 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சமர்ப்பிக்கப்பட்ட DFR அறிக்கையில் , திருச்சியில் மெட்ரோ ரயில் வரும் என்கிற நம்பிக்கையை உறுதி செய்தாலும் எப்போது திட்டம் தொடங்கப்படும் என்று தெரியவில்லை.. ஏனெனில் இந்த திட்டத்திற்கு தமிழக அரசு முன்னுரிமை அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரை மெட்ரோ திட்டங்களுக்கே தற்போது முன்னுரிமை அளிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படுவதாக சென்னை மெட்ரோ நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன. கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் மெட்ரோ திட்டங்களுக்கான சமீபத்திய ஆய்வுகள் மற்றும் ஆய்வுகள் நடத்தப்பட்டிருக்கிறது. ஆனால் திருச்சி மெட்ரோ விவகாரத்தில் அப்படி எந்த முன்னேற்றமும் இதுவரை ஏற்படவில்லை. திருச்சி மெட்ரோ ரயில் திட்டத்தின் மதிப்பிடப்பட்ட செலவு என்பது ₹10,917 கோடி ஆகும்.
திருச்சியில் மெட்ரோ வழித்தடங்களை செயல்படுத்துவதில் பெரிய தடைகள் எதுவும் இருக்காது என்று கூறிய சென்னை மெட்ரோ அதிகாரிகள் , அதேநேரம் திட்டத்திற்கான நிதியை ஏற்பாடு செய்வது ஒரு பெரிய சவாலாகவே உள்ளதாக கூறினார்கள். திருச்சி மெட்ரோ திட்டம் இன்னும் மாநில அரசால் விரைவுபடுத்தப்படவில்லை என்றும் இப்போதைக்கு, அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் கூறினார்கள்.
திருச்சி நகரம் முழுவதும் 45 கி.மீ நீளமுள்ள இரண்டு மெட்ரோ வழித்தடங்கள் அமைக்கபட திட்டமிடப்பட்டள்ளது. சமயபுரத்தை வயலூருடன் இணைக்கும் 19 கி.மீ நீளமுள்ள காரிடார் ஒன்றில், 19 மெட்ரோ ரயில் நிலையங்களும், துவாக்குடியை பஞ்சப்பூருடன் இணைக்கும் 26 கி.மீ நீளத்திற்கு காரிடார் 2வில் 26 மெட்ரோ நிலையங்கள் அமையும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications