திருச்சியில் காவிரி பாலம் சீரமைப்பு பணிகள்... 5 மாதங்களுக்கு 'டேக் டைவர்சன்' - அமைச்சர் கே.என்.நேரு
திருச்சி : காவிரிப் பாலத்தில் ஏற்பட்டுள்ள பழுதைச் சரிசெய்யவும், பராமரிக்கவும் ரூ.6.87 கோடியில் நடைபெறும் பணிக்காக 5 மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றப்படுகிறது என்று அமைச்சா் கே.என். நேரு தெரிவித்தார்.
திருச்சி சிந்தாமணியையும், மாம்பழச் சாலையையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.130 கோடியில் புதிய பாலம் கட்ட தமிழக அரசு நிர்வாக ரீதியாக அனுமதித்து, ரூ.6.87 கோடியில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் அனுமதித்துள்ளது.

இதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு பணிகள் இறுதி செய்யப்படும் சூழலில், காவிரி மேம்பாலப் பணிக்கான போக்குவரத்து மாற்றம் தொடர் பான ஆலோசனைக் கூட்டம், அமைச்சர் கே.என். நேரு தலைமையில் ஆட்சியரகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார் , மாநகராட்சி ஆணையர் இரா. வைத்திநாதன், மாநகரக் காவல் ஆணையர் ஜி. காா்த்திகேயன், நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளர் கிருஷ்ணமூா்த்தி, மாநகராட்சி மேயர் மு. அன்பழகன் மற்றும் பொறியாளர்கள், அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனை நடத்தினர்.
பின்னர் அமைச்சர் கே.என். நேரு செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருச்சி காவிரி பாலம் பேரிங் மாற்றி சரி செய்யப்பட உள்ளது. இதனால் 5 மாதங்களுக்கு இந்த பாலத்தின் வழித்தடத்தை பயன்படுத்த முடியாது. தற்காலிகமாக இருசக்கர வாகனங்கள் மற்றும் வந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் பணிகள் நடைபெற உள்ளதால் வேறு வழித்தடத்தில் போக்குவரத்து எப்படி சரி செய்யலாம் என்பது குறித்து மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

காவிரிப் பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டால் மாற்றுப் பாதையில் வாகனங்கள் செல்லும் வழியைத் தோ்வு செய்வது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது. 2 மாற்று வழிகள் உள்ளன. அந்த வழிகளில் வாகனப் போக்குவரத்தை அனுமதிக்கலாமா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படவுள்ளது.
தற்போது மேம்பாலத்தின் விரிவான திட்ட அறிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரைவு படி புதிய பாலத்திற்கு 8 மாத கால அவகாசம் விடப்பட்டுள்ளது அதில் தற்போது பாலத்தின் கீழ் வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மற்ற வேலைகள் இன்னும் ஐந்து மாதத்தில் நிறைவடையும் இந்த புது பாலம் 40 ஆண்டுகள் தாங்கும் காண வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பணிகள் நடைபெறும்போது ஒரு பகுதியில் மட்டும் இருசக்கர வாகனங்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் அனைத்தும் முடிந்தால் மேலும் 40 ஆண்டுகளுக்குப் பாலத்தைப் பயன்படுத்த முடியும். காவிரிப் பாலத்துக்கு மாற்றாக ரூ.130 கோடியில் கட்டப்படும் புதிய பாலத்துக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது. நிலம் கையகப்படுத்தும் பணியும் நிலுவையில் உள்ளது. முன்னதாக பழைய பாலத்தைச் சீரமைத்துப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவோம் . இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு கூறினார்












Click it and Unblock the Notifications