வேரோடு விழ காத்திருக்கும் ஹை வோல்டேஜ் டவர்.. கொள்ளிடம் ஆற்று பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம்!
திருச்சி: கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக உயர் மின்னழுத்த கோபுரம் சாய்ந்து கீழே விழும் நிலையில் உள்ளதால் கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. திருவானைக்காவல் செக் போஸ்ட் அருகே கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை உடைந்ததோடு, உயர் மின்னழுத்த கோபுரம் சாயும் நிலையில் உள்ளதால் கொள்ளிடம் பாலத்தில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் தொடர் கன மழை பெய்ததை அடுத்து காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகமாக திறந்து விடப்பட்டது. காவிரி நீர் அதிகளவில் வந்ததன் காரணமாக மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வந்தது. இந்நிலையில், மேட்டூா் அணையில் இருந்து உபரி நீா் அதிக அளவில் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், காவிரியில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடிக்கும் மேலாக தண்ணீர் வருகிறது.

இதனால் கொள்ளிடம் ஆற்றிலும் தண்ணீா் திறந்து விடப்பட்டது. திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேல் அணையில் இருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது. ஆா்ப்பரித்து வந்த தண்ணீரில் நேற்று நள்ளிரவு கொள்ளிடம் பாலத்தின் கீழே இருந்த தடுப்பணையின் ஒருபகுதி உடைந்தது.
முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரியில் 31,000 கன அடியும், கொள்ளிடத்தில் 75,000 கன அடி நீரும் செல்கிறது. இதனால் கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவரும் நிலையில் பாதுகாப்பு நடவடிக்கையாக கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் வசித்த பொது மக்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
கொள்ளிடம் ஆற்றில் வெள்ள நீர் செல்வதால் சிதம்பரம் அருகே உள்ள ஜெயங்கொண்ட பட்டினம், கிட்டு காட்டூர், கீழ குண்டலாம்பாடி ஆகிய பகுதிகளில் வெள்ள நீர் புகுவது வழக்கம். எனவே ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என வருவாய்த்துறையினர் ஆட்டோ ஒலிபெருக்கின் மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும் மண் அரிப்பை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட தடுப்பணை உடைந்து சேதம் அடைந்துள்ளதை அடுத்து கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் காவல் துறையினர் இரவு பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, ஆற்றின் நடுவே அமைக்கப்பட்டுள்ள உயர் மின்னழுத்த கோபுரத்தின் காங்கிரிட் தூண்கள் சாயும் நிலையில் உள்ளன.
திருச்சி திருவானைக்காவல் கொள்ளிடம் நேப்பியர் பாலம் அருகே உள்ள, ஒரு லட்சத்து 10 ஆயிரம் மெகாவாட் (110 kV) உயர் மின்னழுத்த ராட்சத கோபுரம், கொள்ளிடம் ஆற்றில் வரும் வெள்ளம் காரணமாக அடிப்பகுதி அரித்துச் செல்லப்பட்டது. வெள்ளம் பெருக்கெடுத்து வரும் நிலையில் உயர் மின்னழுத்த கோபுரத்தின் கான்கிரீட் தூண்கள் எப்போது வேண்டுமானாலும் சாயும் நிலையில் இருக்கிறது.
இதன் காரணமாக அந்த பகுதிக்கு யாரும் செல்லாமல் இருக்க கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. மேலும், கொள்ளிடம் ஆற்றில் உள்ள ராட்சத கோபுரத்திற்கு செல்லும் மின்சாரம் நிறுத்தப்பட்டு உள்ளது. மாற்று வழியாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்ரீரங்கம் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருவானைக்காவல் செக் போஸ்ட் அருகே கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை உடைந்து சேதமடைந்துள்ள நிலையில், உயர் மின்னழுத்த கோபுரம் சாயும் நிலையில் உள்ளதால் கொள்ளிடம் பாலத்தில் இருபுறங்களிலும் தற்போது போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. அனைத்து வாகனங்களும் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications