திருச்சியில் பயங்கரம்.. மனைவி, மாமியாரை கழுத்தறுத்து கொன்ற இளைஞர்.. குழந்தையுடன் தலைமறைவு
திருச்சி: திருச்சியில் குடும்ப தகராறில் மனைவி, மாமியாரை கழுத்தறுத்து படுகொலை செய்துவிட்டு குழந்தையுடன் தலைமறைவான இளைஞரை போலீசார் தேடி வருகிறார்கள்.
இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: பெரம்பலூரை சேர்ந்தவர் உலகநாதன் (வயது 35). இவரது மனைவி பவித்ரா. இவர்களுக்கு 3 வயதில் கனிஷ்கா என்ற பெண் குழந்தை உள்ளது. உலகநாதன் டயர் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்தார். ஆனால் உலகநாதன் தற்போது வேலைக்கு எதுவும் செல்லாமல் இருந்திருக்கிறார்.. பவித்ரா டி.என்.பி.எஸ்.சி. குரூப் தேர்வுக்கு திருச்சியில் உள்ள ஒரு தனியார் அகாடமியில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்தார்.
கடந்த ஆண்டு இவர்கள், திருச்சி பெரிய மிளகுபாறை நாயக்கர்தெருவில் ஒத்திக்கு வீடு பார்த்து குடி வந்திருகிறார்கள்.. பவித்ரா எப்படியாவது அரசு வேலை வாங்கிவிட வேண்டும் என்ற முனைப்புடன் படித்து வந்திருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு பவித்ராவின் தாயார் கலைச்செல்வி தனது மகள் மற்றும் பேத்தியை பார்ப்பதற்காக பெரிய மிளகுபாறையில் உள்ள வீட்டுக்கு வந்திருக்கிறார்.

கழுத்தை அறுத்து படுகொலை
நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. ஆத்திரமடைந்த உலகநாதன் கத்தியால் பவித்ராவையும், அதை தடுக்கச்சென்ற மாமியார் கலைச்செல்வியையும் கழுத்தை அறுத்து படுகொலை செய்திருக்கிறார். பின்னர் அதிகாலை 4 மணி அளவில் குழந்தை கனிஷ்காவை தூக்கி கொண்டு வீட்டின் கதவை வெளிப்புறமாக பூட்டுபோட்டு பூட்டி விட்டு தப்பி சென்றுவிட்டார்.

ரத்த வெள்ளம்
நேற்று மாலை உலகநாதனின் தாயார் இந்திராணி பவித்ராவை செல்போனில் தொடர்பு கொண்டார். நீண்ட நேரமாக அவர் போனை எடுக்காததால் சந்தேகமடைந்த அவர் பக்கத்து வீட்டில் குடியிருப்பவர்களிடம் செல்போனில் பேசி வீட்டை திறந்து பார்க்கும் படி கூறியிருக்கிறார். உடனே அக்கம்பக்கத்தினர் பூட்டை உடைத்து உள்ளே சென்றபோது, அங்கு பவித்ரா மற்றும் அவரது தாய் கலைச்செல்வி கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்திருக்கிறார்கள்.

போலீசார் விசாரணை
இதைக்கண்டு அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு போலீஸ் துணை கமிஷனர் பவன் குமார் ரெட்டி, உதவி கமிஷனர் தமிழ்மாறன், இன்ஸ்பெக்டர்கள் விக்டர், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் நேரில் வந்து விசாரணை நடத்தினார்கள் துப்பறியும் நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர்.

குழந்தையுடன் தலைமறைவு
இந்த இரட்டை கொலை சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அதிகாலை 4 மணியளவில் உலகநாதன் குழந்தையுடன் வீட்டிலிருந்து வெளியே சென்றதை பார்த்ததாக தெரிவித்தார்கள். இதையடுத்து குழந்தையுடன் தலைமறைவான உலகநாதனை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். திருச்சியில் மனைவி மற்றும் மாமியாரை கொலை செய்துவிட்டு வாலிபர் தலைமறைவான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications