திருச்சி டூ சென்னை.. மிக்ஸியை பார்த்ததுமே ஆடிப்போன ஆபீசர்ஸ்.. கிட்ட போனால் தங்கமோ தங்கம்.. பரபரப்பு
திருச்சி: திருச்சி ஏர்போர்ட்டில், அனைத்து அதிகாரிகளின் கவனமும், மிக்ஸியிலேயே குவிந்திருந்தது.. ஐஸ் உடைக்கும் மிக்சியை உடைத்து பார்த்ததுமே அதிகாரிகள் அதிர்ந்துவிட்டார்கள்.. திருச்சி ஏர்போர்ட்டில் நேற்றும், இன்றும் என்ன சம்பவம் நடந்தது?
வெளிநாடுகளிலிருந்து தங்கம் கடத்தும் சம்பவங்கள், நம்முடைய இந்தியாவின் பல மாநிலங்களில் நடந்து வருகின்றன.. இவைகளை தடுக்க எத்தனையோ நடவடிக்கைகளை சுங்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்டபோதிலும், தினுசுதினுசான கடத்தல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

தங்கத்தின் விலை
இதற்கெல்லாம் காரணம், உள்நாட்டில் வரி விதிக்கப்பட்ட தங்கத்தின் விலை அதிகம் என்பதால், வெளிநாடுகளிலிருந்து இப்படி கடத்தி வந்து, கள்ளசந்தையில் விற்றுவிடுகிறார்கள்.
கிலோ கணக்கிலான தங்கத்தை விமானங்கள் அல்லது கப்பல் மூலமாக கடத்துவதால், அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுவிடுகிறது. அதனால்தான், தங்க கடத்தலை ஒழிக்க மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் செயல்பட்டு வருகின்றன. இதன் கீழ், சுங்கத்துறை மற்றும் மத்திய வருவாய் புலானய்வு துறை செயல்படுகின்றன.
ஏர்போர்ட்டில் அதிரடி சோதனை
இதையடுத்து, தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரியை 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக மத்திய அரசு குறைக்கவும், கடத்தல் சம்பவங்களும் குறைய துவங்கின. கடந்த 2024 ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை 175 கோடி ரூபாய் மதிப்பிலான 258 கிலோ தங்கம் சென்னை ஏர்போர்ட்டில் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும் தங்க கடத்தல்கள் தொடர்ந்தவண்ணம் உள்ளது.. நேற்றுகூட திருச்சி ஏர்போர்ட்டில் நூதனமான மோசடி நடந்துள்ளது.. திருச்சி ஏர்போர்ட்டிலிருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய். அபுதாபி, தாய்லாந்து, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.. இதில், துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ள நாடுகளுக்கு அதிக அளவிலான சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
திருச்சியில் திணறிய அதிகாரிகள்
அந்தவகையில், சார்ஜாவிலிருந்து, திருச்சி ஏர்போர்ட்டுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளிடம் திருச்சி விமான நிலைய மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். ஒரு பயணி மீது அதிகமான சந்தேகம் எழுந்தது. இதனால், அவரை மட்டும் சுங்கத்துறை அதிகாரிகள் தனியாக அழைத்து சென்று சோதனை செய்தனர்.
அப்போது அவரது உடமையில், ஐஸ் உடைக்கும் எந்திரத்தை வைத்திருந்தார். அந்த ஐஸ் கிரஷர் மிக்ஸியை உடைத்து பார்த்தபோது, தங்கத்தை மறைத்து வைத்து கடத்தியது தெரியவந்தது. கிட்டத்தட்ட 1.39 கிலோ எடை கொண்ட ரூ.1 கோடியே 22 லட்சம் மதிப்பிலான தங்கம் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த பயணியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
62 வயது பெண் நாச்சியார்
அதேபோல, இன்று அதிகாலையும் ஒருவர் சிக்கியிருக்கிறார்.. 3.30 மணிக்கு திருச்சியில் இருந்து சிங்கப்பூர் நோக்கி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில பயணம் செய்யவிருந்த பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்..
அப்போது, நாகப்பட்டினம் உம்மா ஹமீது நாச்சியார் (வயது 62) என்ற பெண் பயணி, தன்னுடைய உடமையில் மறைத்து ரூ.18.26 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சியை சிங்கப்பூருக்கு கடத்த இருந்தது தெரியவந்தது. இதனை தங்கத்தை பறிமுதல் செய்து, அந்த பெண்ணிடம் அதிகாரிகள் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.
சென்னையில் 3.5 கிலோ தங்கம்
நேற்று முன்தினம்தான், மும்பையில் இருந்து சென்னை வந்த உள்நாட்டு விமான பயணிகளிடம் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் 3 பயணிகளின் உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த 2.8 கோடி ரூபாய் மதிப்புள்ள 3.5 கிலோ தங்கப் பசை பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன் 3 பயணிகளும் கைதாகியிருந்தனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், திருச்சியில் கடத்தல் சம்பவம் நடந்துள்ளது மக்களின் கவனத்தை பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications