திருச்சியில் கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்ற பெங்களூர் பொறியாளர் மரணம்- வல்லுநர்கள் ஆய்வு
திருச்சியில் கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்றவர் மரணம்.
திருச்சி: திருச்சியில் கொரோனா பாதிப்பு அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்ற பெங்களூரில் பணிபுரிந்த 27 வயது பொறியாளர் நேற்று உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து திருச்சியில் மருத்துவ துறை வல்லுநர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிகவும் கட்டுப்பாட்டில் உள்ளது. கொரோனாவால் ஏற்படும் மரணங்களே இல்லை என்கிற நிலைமை உருவாகி உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மரணங்கள் என்பது கடந்த காலம் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.

தற்போது H3N2, இன்புளூயன்சா பி பாதிப்பால் காய்ச்சல், இருமல் ஏற்பட்டு வருகிறது. இதற்கான சிறப்பு சிகிச்சை முகாம்களை தமிழ்நாடு அரசு நடத்தி வருகிறது. அரசு மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை பிரிவுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் திடீரென இந்தியாவில் கடந்த சில நாட்களாக படிப்படியாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு கூடுதலாகி வருகிறது. இந்தியாவில் தற்போதைய நிலையில் 3618 பேர் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே கொரோனா பாதிப்பு அறிகுறிகளுடன் திருச்சியில் சிகிச்சை பெற்ற 27 வயது பொறியாளர் ஒருவர் மரணம் அடைந்துள்ளார். திருச்சி மேலசிந்தாமணி பகுதியை சேர்ந்த 27 வயது இளைஞர், பெங்களூரில் பணியாற்றினார். தமது உறவினர்கள், நண்பர்களுடன் கோவா சுற்றுப் பயணம் சென்றுவிட்டு திருச்சி திரும்பினார் அந்த இளைஞர்.
திடீரென அந்த இளைஞருக்கு காய்ச்சல், மூச்சு திணறல், இருமல் பாதிப்பு இருந்ததால் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக கூறி தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தனர். அதேநேரத்தில் கொரோனா அல்லது வேறு பாதிப்பு என்ன என்பதை உறுதி செய்ய ரத்த பரிசோதனை நடத்தப்பட்டது. ஆனால் ரத்த பரிசோதனை முடிவுகள் வருவதற்குள் அந்த இளைஞர் உயிரிழந்துவிட்டார்.
இது தொடர்பாக திருச்சி மாவட்ட நிர்வாகம், மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து திருச்சி மாநகராட்சி மருத்துவ வல்லுநர்கள் குழு, அந்த பொறியாளர் வீட்டுக்கு சென்று அவருடன் தொடர்பில் இருந்த குடும்பத்தினர் 5 பேருக்கு பரிசோதனை நடத்தினர். பொறியாளரின் வீட்டு பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அவரது ரத்த பரிசோதனை முடிவுகள் அடிப்படையில்தான் கொரோனாவால் உயிரிழந்தாரா? அல்லது வேறு பாதிப்பு காரணமா? என்பதை உறுதி செய்ய இயலும் என்கின்றனர் மருத்துவர்கள்.












Click it and Unblock the Notifications