காங்கிரஸ் கொண்டு வந்த சட்டம்.. இன்று ராகுல் காந்தியையே பாதித்திருக்கிறது.. டிடிவி தினகரன் கமெண்ட்!
திருச்சி: ஒருவர் ஒரு பதவியில் இருக்கும் போது அவரது பதவி பறிபோனால் மேல்முறையீடு செய்து இறுதி தீர்ப்பு வரும் வரை அந்த பதவியில் தொடரலாம் என்ற நிலையை ராகுல் காந்தி ஒத்துக் கொள்ளவில்லை. காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த சட்டம், அவர்களையே பாதித்திருப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி பெயர் குறித்த அவதூறு வழக்கில் 2 ஆண்டு தண்டனை பெற்ற ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அறவழிப் போராட்டம், சத்தியாகிரகப் போராட்டம் என்று காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் தீவிரப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

டிடிவி தினகரன் பேட்டி
இந்த விவகாரம் குறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து டிடிவி தினகரன் கூறுகையில், கடந்த 2011-ல் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தத்தால் அரசியல் ரீதியான பழிவாங்கும் நடவடிக்கைகள் இருக்கலாம் என கூறப்பட்டது.

காங்கிரஸ் கொண்டுவந்த சட்டம்
ஒருவர் ஒரு பதவியில் இருக்கும் போது அவரது பதவி பறிபோனால் மேல்முறையீடு செய்து இறுதி தீர்ப்பு வரும் வரை அந்த பதவியில் தொடரலாம் என்ற நிலையை ராகுல் காந்தி ஒத்துக் கொள்ளவில்லை. பின்னர் அந்த சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டது. ராகுல் காந்தி கொண்டு வந்த சட்டம் இன்றைக்கு அவரையே பாதித்துள்ளது. தேர்தல் ஆணையம் மூலம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டதை பற்றி கருத்து சொல்ல ஒன்றும் இல்லை என்று தெரிவித்தார்.

துரோகிகள்
தொடர்ந்து அதிமுக பற்றிய கேள்விக்கு, பதவி வெறி மற்றும் ஒரு சிலரின் சுயலாபத்தால் அதிமுக தொடர்ந்து பலவீனப்பட்டு வருகிறது. அதிமுக ஒரு லட்சம் துரோகிகள் இருப்பதாக அவர்களே ஒத்துக் கொள்கின்றனர். அதனை அதிமுகவின் உண்மை தொண்டர்கள் ஒன்றிணைந்து மீட்டெடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். தொடர்ந்து, அமமுக பொறுப்பாளர் சிலர் மீது குறைகள் இருப்பதாக கூறப்பட்டதையடுத்து, அவர்களுக்கு பதிலாக புதியவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அன்பில் மகேஷ் பற்றி கருத்து
தொடர்ந்து பிளஸ் 2 பொதுத்தேர்வு ஆப்செண்டீஸ் பற்றி அன்பில் மகேஷ் அளித்த விளக்கம் பற்றிய கேள்விக்கு, பிளஸ்-2 பொதுத்தேர்வில் நிறைய மாணவர்கள் தேர்வு எழுதாமல் தவிர்த்ததற்கு ஐடிஐ, பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்க சென்றுவிட்டதாக அமைச்சர் அன்பில் மகேஷ் சொல்லி இருக்கிறார். மாணவர்கள் கல்வி இடைநிற்றலை புள்ளி விபரங்கள் மற்றும் ஆதாரத்துடன் வெளியிட வேண்டியது அமைச்சரின் கடமை. அதை அவர் செய்வார் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications