அமைச்சர் கே.என்.நேரு Vs பழனியாண்டி எம்.எல்.ஏ.! குவாரிக்கு ஃபைன் போட யார் காரணம்? அம்பலமான உரசல்!
திருச்சி: அமைச்சர் கே.என்.நேருவுக்கும் ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. பழனியாண்டிக்கும் இடையேயான உரசலை ஆடியோ ஒன்று வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் பழனியாண்டி. இவர் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை பகுதியில் சொந்தமாக குவாரி தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் வருவாய்த் துறை அதிகாரிகள் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வான பழனியாண்டியின் குவாரிக்கு பல கோடி ரூபாய் அபராதம் விதித்திருக்கிறார்கள்.

இதன் பின்னணியில் அமைச்சர் நேரு உள்ளதாக சந்தேகிக்கும் பழனியாண்டி எம்.எல்.ஏ., நேருவின் அறிவுறுத்தல் படி தான் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக கூறும் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அமைச்சர் நேருவுடன் பழனியாண்டி எம்.எல்.ஏ. மிகவும் இணக்கமாக செல்லக்கூடியவராச்சே, அவர்களுக்குள் என்ன புது பிரச்சனை என விவாதிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் திருச்சி மாவட்ட திமுகவினர். அண்மையில் கூட திருச்சி சிவா வீடு தாக்கப்பட்ட விவகாரத்தில் அமைச்சர் நேருவுக்கு ஆதரவாக நின்றவர் பழனியாண்டி.
இதனிடையே பழனியாண்டியின் குவாரிக்கு அபராதம் விதிக்கப்பட்டதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் சொந்தக் கட்சிக்காரர்களுக்கு என்றுமே தாம் துரோகம் செய்ய மாட்டேன் எனவும் அமைச்சர் நேரு விளக்கம் கொடுத்த ஆடியோவும் வந்துள்ளது.
அமைச்சர் நேருவை பொறுத்தவரை அவரை திமுகவினர் நாட்டாமை என்ற அடைமொழியுடன் அழைப்பது வழக்கம். காரணம் தமிழகம் முழுவதும் திமுக உட்கட்சிப் பஞ்சாயத்தை கட்சித் தலைமை அறிவுறுத்தலின் பேரில் முதன்மைச் செயலாளர் என்கிற முறையில் சுமூகமாக பேசி முடித்து தீர்வு காண வழி வகுப்பார்.
இப்படி ஊருக்கே பஞ்சாயத்து செய்து வரும் அவருக்கு திருச்சியில் புது பஞ்சாயத்து உருவாகியிருக்கிறது. அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் இடையேயான பனிப்போர், மேயர்கள் கவுன்சிலர்கள் இடையேயான மோதலால் கட்சித் தலைமைக்கு தான் தலைவலி ஏற்படுகிறது.












Click it and Unblock the Notifications