Tvk vijay Campaign: உங்க விஜய்..நான் வரேன்! திருப்புமுனையை ஏற்படுத்துமா திருச்சி? மாஸாக எண்ட்ரி கொடுத்த விஜய்!
சென்னை: நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான விஜய், திருச்சியில் இருந்து இன்று தனது தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்தைத் தொடங்குகிறார். இதற்காக சென்னையிலிருந்து திருச்சி விமான நிலையம் வந்த அவருக்கு ரசிகர்களும், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளும் உற்சாக வரவேற்பளித்தனர். இந்நிலையில் தடுப்புகளை தாண்டி விஜயை நோக்கி சென்ற ரசிகர்களால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
நடிகராக இருந்து அரசியல்வாதி அவதாரம் எடுத்திருக்கிறார் விஜய். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அரசியல் கட்சியைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த அவர், அன்றே தமிழக வெற்றிக் கழகம் எனும் பெயரையும் அறிவித்தார்.
தொடர்ந்து நிர்வாகிகளுடன் ஆலோசனை, மாவட்ட நிர்வாகிகள் நியமனம் என பிசியாக இருந்த விஜய் அக்டோபரில் முதல் மாநில மாநாட்டின் மூலம் நேரடி அரசியலுக்கு வந்தார். அதற்குப் பிறகு ஒரு சில நிகழ்வுகளைத் தவிர பெரிய அளவில் விஜய் பொதுமக்களிடையே தோன்றவில்லை.

நடிகர் விஜய்
இதனால் ஒர்க் ஃப்ரம் ஹோம் அரசியல் செய்கிறார் என்ற விமர்சனம் அவர் மீது முன்வைக்கப்பட்டது. சமீபத்தில் மதுரையில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் விஜயின் பேச்சும், ரசிகர்களின் நடத்தையும் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டது. இந்த நிலையில் 2026 தேர்தலை ஒட்டி விஜய் பிரச்சாரப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இன்று திருச்சியில் இருந்து விஜயின் தேர்தல் சுற்றுப்பயணம் நடக்க இருக்கிறது.
விஜய் பிரச்சாரம்
டிசம்பர் வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விஜயின் பிரச்சாரப் பயணம் திட்டமிடப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இன்றைய தினம் பிரச்சாரம் தொடங்க இருக்கிறது. தனது பிரச்சாரத்துக்காக திருச்சியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் விஜய். வட மாவட்டத்தில் முதல் மாநில மாநாடு, தென் மாவட்டத்தில் இரண்டாவது மாநில மாநாடு என நடத்திய விஜய் தனது பிரச்சாரத்தை மத்திய மாவட்டத்திலிருந்து தொடங்குகிறார்.
திருச்சி விஜய்
திருச்சி திருப்புமுனையை ஏற்படுத்தும் என்ற திட்டத்தோடு விஜயின் இந்தப் பிரச்சாரப் பயணம் தொடங்குகிறது. இன்றைய அரியலூர், பெரம்பலூரிலும் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். இதற்காக நவீன வசதிகளுடன் பிரச்சாரப் பேருந்தும் தயாராகி இருக்கிறது. நேற்றே அந்த வாகனம் திருச்சி வந்துவிட்டது. இந்த நிலையில் இன்று சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வரும் விஜய் அங்கிருந்து திருச்சி மரக்கடை பகுதியில் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார்.
தமிழக வெற்றிக் கழகம்
விஜயின் இந்தப் பிரச்சாரத்திற்குக் காவல்துறை கடும் கட்டுப்பாடுகள் விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை இல்லாத அளவுக்குக் காவல்துறை நெருக்கடி அளிப்பதாக விஜயைக் குற்றம் சாட்டி இருந்தார். இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக மரக்கடை பகுதிக்கு வரும் விஜய் அங்கிருந்து பிரச்சாரத்தைத் துவங்குகிறார். இதற்கான ஏற்பாடுகளைத் தமிழக வெற்றிக் கழகத்தினர் தீவிரமாகச் செய்து வருகின்றனர். கடைசி நேரத்தில் ஒருங்கிணைப்புக் குழுவை அறிவித்து உத்தரவிட்டிருக்கிறார் கட்சியின் பொதுச்செயலாளர் ஆன புஸ்ஸி ஆனந்த்.
தமிழக அரசியல்
திருச்சிப் பிரச்சாரம் திருப்புமுனையை ஏற்படுத்துமா? என்பதுதான் தற்போதைய தமிழக வெற்றிக்கழகத் தொண்டர்களின் எதிர்பார்ப்பு. அதே நேரத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைத்துக் கட்சிகளும் விஜயின் தேர்தல் பிரச்சாரத்தை உற்று நோக்குகின்றன. சனிக்கிழமை அரசியல்வாதி என்ற விமர்சனமும் தற்போது விஜய் மீது முன்வைக்கப்பட்டிருக்கும் நிலையில், சனிக்கிழமைப் பேச்சு அடுத்த வாரம் முழுவதும் தமிழக அரசியலில் எதிரொலிக்கும். அதற்கு அடுத்த வாரம் மீண்டும் பிரச்சாரத்தை விஜய் மேற்கொள்வார். இப்படியாக மூன்று மாதங்களுக்கு விஜய் குறித்த பேச்சுதான் தமிழக அரசியலில் இருக்கும் என்றும், அதனால்தான் சனிக்கிழமைப் பிரச்சாரத்தை விஜய் தேர்ந்தெடுத்தார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
விஜய் வருகை
இந்த நிலையில் பிரச்சாரத்தில் கலந்து கொள்வதற்காக விஜய் தனி விமானம் மூலமாக சென்னையில் இருந்து திருச்சி வந்தடைந்தார். விஜயை வரவேற்க ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அங்கு குவிந்ததால் பரபரப்பான சூழல் உருவானது. விமான நிலைய பகுதிக்குள் ரசிகர்கள் நுழைய முடியாதபடி போலீஸாரும், விமான நிலைய பாதுகாப்பு படையினரும் தடுப்புகள் அமைத்திருந்தனர். ஆனால் அதனையும் தாண்டி குதித்து விஜய் ரசிகர்கள் விஜய் வாகனத்தை சூழ்ந்து கொண்டனர். இதனால் விஜயின் வாகனம் மிக தாமதமாகவே விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது. 10:30 மணியிலிருந்து 11 மணி வரை மட்டுமே விஜய் பிரச்சாரம் செய்ய அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அப்பகுதிக்கு செல்லவே நீண்ட நேரம் ஆனது.












Click it and Unblock the Notifications