சவப்பெட்டியில் குழந்தை சுஜித் உடல்... ஊரோடு சேர்ந்து வானமும் அழுதது!
Recommended Video
திருச்சி: ஆள்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சுஜித்தின் உடல் மணப்பாறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
பிரேத பரிசோதனை முடிவுகள் தொடர்பான விவரம் ஏதும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சுமார் ஒன்றை மணி நேரத்தில் சிறுவன் சுஜித்தின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டு அவனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
உடற்கூராய்வு
ஆள்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட 2 வயது சிறுவன் சுஜித்தின் உடல் மணப்பாறை அரசு மருத்துவமனையில் அதிவேகமாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. எந்தவித காலதாமதமும் ஏற்படாமல் மருத்துவர்கள் குழு பிரேத பரிசோதனையை விரைந்து நடத்தினர்.
தயார்நிலையில் சவப்பெட்டி
சிறுவன் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டவுடன் அவனுடைய உடலை வைப்பதற்கான சவப்பெட்டியை மாவட்ட நிர்வாகமே ஏற்பாடு செய்தது. சிலுவை வரையப்பட்ட சவப்பெட்டி உடனடியாக தயார் செய்யப்பட்டு அது உடனடியாக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
கண்கலங்க செய்த நிகழ்வு
ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்து சவப்பெட்டி இறக்கப்பட்டு அதில் சுஜித் உடல் வைக்கப்பட்டது. இந்த நிகழ்வு அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர்களை கண்கலங்கச் செய்தது.
2 அமைச்சர்கள்
சிறுவன் சுஜித் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் சென்று உடலை நடுக்காட்டுபட்டிக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.