பிரதமர் அப்படி என்ன நல்லது செய்துவிட்டார்?.. ரஜினி விளக்க வேண்டும்.. வைகோ கோரிக்கை
திருச்சி: பிரதமர் நரேந்திர மோடி என்ன நல்லது செய்துவிட்டார் என ரஜினிகாந்த் விளக்கம் அளிக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சியில் அனைத்து கட்சிகள் சார்பில் திமுக தோழமை கட்சிகளுடன் போராட்டம் நடத்தி வருகிறது. இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறுகையில் பிப்ரவரி 11-ஆம் தேதி 16 மாவட்டங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டோம். பிப் 21- ஆம் தேதி சென்னையில் இருக்கக் கூடிய மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டோம். மார்ச் 23-ஆம் தேதி ஓஎன்ஜிசி அலுவலகங்களை முற்றுகையிட்டோம்.
மார்ச் 27-ஆம் தேதி சட்டசபையை தமிழக அரசு கூட்டியது. மேததாது அணைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து திமுக, அதிமுக எம்பிக்கள் 55 பேர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மேகதாதுவில் அணை கட்ட கூடாது என தெரிவித்தனர்.
மத்திய அரசு ஒப்புதல்
ஆனால் நாங்கள் அணை கட்டியே தீருவோம் என செப்டம்பர் மாதம் மாநில முதல்வர் குமாரசாமி திட்ட அறிக்கை அனுப்பி வைத்தார். ஆனால் நவம்பர் 25-ஆம் தேதி மேகதாதுவில் அணை கட்ட ஆய்வு செய்யுமாறு மத்திய அரசு ஒப்புதல் அளித்துவிட்டது.
எத்தனை கோடி
இதை அறிந்த ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி இன்று திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்து இங்கு நாம் எல்லோரும் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் போராட்டத்தை நடத்தி வருகிறோம். மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ரூ, 5912 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அணை கட்டுவதற்கான பொருட்களும் வந்திறங்கிவிட்டன.
வானமே
அணை கட்டினால் அணையை உடைக்க முடியாது. ஆனால் அணையின் இந்திய ஒருமைப்பாடு உடைந்து விடும் என எச்சரிக்கை விடுக்கிறேன். அழிந்து விட்டது எங்கள் சோழ வளநாடு, பிச்சை பாத்திரம் ஏந்துகிறது மணிமேகலை. அமுதசுரபியை போல் எங்களுக்கு தருவதற்கு யாரும் இல்லை. வானமே எங்களை ஏன் மழை பொழிந்து வஞ்சிக்கிறாய். அலைக்கடலே எங்கள் சோழ நாட்டினுடைய பெரும் பகுதியை ஏன் அழித்தாய்.
இழப்பீட்டு தொகை குறைவு
சுனாமியில் கூட 1000 பேர் செத்தார்கள். இது எங்கள் விவசாய குடும்பங்களை மண்ணிலே புதைத்துவிட்டது. தென்னை, வாழை மரங்களுக்கு நடுவே எம் விவசாயிகள் நடைப்பிணமாக மாறிவிட்டனர். கஜா புயலால் பாதிப்புக்கு மத்திய அரசு ரூ.50 ஆயிரம் கோடி நிவாரண நிதி வழங்க வேண்டும். இந்த அதிமுக அரசோ 15 ஆயிரம் கோடி கேட்டுள்ளது. நம் பிரதமரோ ரூ.350 கோடி என்கிறார்கள்.
தூக்கி எறிய வேண்டும்
ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகியன அணை கட்டிக் கொண்டால் நாம் ஏன் இந்தியாவில் இருக்க வேண்டும் என்ற கேள்வி எதிர்காலத்தில் இளைஞர்கள் மனதில் எழும். தனி நாடாக இருந்தாலாவது ஐ.நா.சபையில் முறையிடலாம் என்ற எண்ணம் வரும். எனவே வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடியின் கூட்டத்தை குப்பைத் தொட்டியிலே தூக்கி எறிய வேண்டும்.
தடுத்து நிறுத்துவோம்
இந்த கருமேகங்களை விட எங்கள் கருங்கொடி படலம் உங்கள் விமானத்தை உள்ளே விடாது. தேர்தல் பிரசாரத்திற்காக கூட பிரதமர் மோடியை தமிழகத்திற்குள் வர விடமாட்டோம். மத்திய அரசு அலுவலகங்களில் போராட்டம் நடத்தப்படும். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் மேகதாது அணை எவ்வளவு கட்டியிருந்தாலும் அது தடுத்து நிறுத்தப்படும்.
எதிர்க்கட்சிகள் கண்டனம்
பிரதமர் என்ன நன்மை செய்துவிட்டார் என்பதை ரஜினிகாந்த் நாட்டிற்கு விளக்கம் அளிக்க வேண்டும். தமிழகத்தில் எந்த இடத்திற்கும் மோடி வந்தாலும் அவரை வர விடாமல் தடுப்பதோடு கறுப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டம் செய்வோம். இதில் உறுதியோடு இருக்கிறோம். இந்த மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு அனைத்து எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து கொள்வதோடு இதை தடுக்க தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைகோ பேசினார்.