"தவெகவுக்கு இடையூறு தந்து நாங்க என்ன செய்யப்போறோம்? எனக்கே அனுமதி தரல".. அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
திருச்சி: "தவெகவுக்கு இடையூறு தந்து நாங்கள் என்ன செய்யப் போகிறோம்? ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் எந்த கட்சியாக இருந்தாலும் மக்களுக்கு இடையூறு ஏற்படாத இடமாகப் பார்த்துதான் பரப்புரை செய்ய காவல்துறை அனுமதி கொடுக்கிறது. அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. இந்நிலையில், தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் 2 மாநில மாநாடுகளை நடத்தி உள்ள சூழலில், தனது கட்சிக்கான முதல் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்க இருக்கிறார்.

விஜய் பிரச்சாரம்
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வரும் 13 ஆம் தேதி முதல் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார். தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களைச் சந்தித்துப் பேச உள்ளார். இந்த நிலையில் வருகிற 13 ஆம் தேதி திருச்சியில் தனது சுற்றுப்பயணத்தை அவர் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரியிருந்தனர். ஆனால், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் மரக்கடை பகுதியில் சுற்றுப்பயணத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்தது.
இந்த நிலையில் தற்போது திருச்சி காவல்துறை விஜய்யின் சுற்றுப்பயணத்திற்கு அனுமதி அளித்துள்ளது. மேலும் சில நிபந்தனைகளையும் அறிவித்துள்ளது. திருச்சி காந்திநகர் மார்க்கெட் பகுதியில் விஜய் பிரச்சாரம் செய்யலாம் எனவும், போக்குவரத்து இடையூறு செய்ய கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல், மற்றும் வன்முறை நிகழ்வுகள் ஏற்படக் கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஆளுங்கட்சி இடையூறு?
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நடத்தும் பிரச்சாரத்துக்கு ஆளும் திமுக அரசு குடைச்சல் கொடுப்பதாக தவெகவினர் விமர்சித்து வந்தனர். விஜய்க்கு மக்கள் ஆதரவு அதிகம் இருப்பதால் காழ்ப்புணர்ச்சியில் திமுக அரசு செயல்படுவதாகவும், அதன் காரணமாகவே விஜய்யின் பிரச்சாரத்துக்கு இடையூறு செய்வதாகவும் விமர்சித்தனர்.
இந்நிலையில் இந்தக் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மருத்துள்ளார் அமைச்சர் கேஎன் நேரு. தவெகவுக்கு இடையூறு தந்து நாங்கள் என்ன செய்யப் போகிறோம்? எந்த கட்சியாக இருந்தாலும் மக்களுக்கு இடையூறு ஏற்படாத இடமாகப் பார்த்துதான் பரப்புரை செய்ய காவல்துறை அனுமதி கொடுக்கிறது என அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
கேஎன் நேரு மறுப்பு
திருச்சியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, "திருச்சி மரக்கடையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பரப்புரைக்கு அவர்கள் கேட்ட இடத்தை கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எங்களுக்கு அதிமுக ஆட்சியில் சிந்தாமணி அண்ணா சிலை உள்ளிட்ட இடங்களில் அனுமதி கொடுக்கவில்லை. பல இடங்களில் அதிமுக ஆளுங்கட்சியாக இருக்கும் போது அதிமுக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. திருச்சி கண்டோமென்ட் போஸ்ட் ஆபீஸில் ஆளும் கட்சியாக அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது. நாங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்போது எங்களுக்கு அந்த இடத்தில் அனுமதி கொடுக்கவில்லை.
நாங்க ஏன் இடையூறு செய்யப்போகிறோம்?
அப்போது திருச்சி மாவட்ட ஆட்சியரிடமும் காவல்துறை உயர் அதிகாரிகளிடமும் குறிப்பிட்ட இடங்களை அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்துவதற்காக ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தேன். அதன் பின் குறிப்பிட்ட இடங்கள் பிரச்சாரம் செய்வதற்காக ஒதுக்கப்படுகிறது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் இடங்களில் எந்த இடத்தையும் ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி காவல்த்துறை அனுமதி அளிப்பது கிடையாது.
தற்போது விஜய்க்கு கொடுக்கப்பட்டுள்ள காந்தி மார்க்கெட் பகுதியில் கடைசியாக 20 ஆண்டுகளுக்கு முன்பு கலைஞர் கருணாநிதி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு எனக்கு அனுமதி கொடுக்கவில்லை. இப்போது ஜூபிட்டர் தியேட்டர் இருக்கும் பகுதியை நோக்கி அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஏன் தவெகவினர் பிரச்சாரத்திற்க்கு இடையூறு செய்யப் போகிறோம்?" எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.












Click it and Unblock the Notifications